நினைப்புப் பேயே
நினைப்பே
கேள்
51
பரத்தில் சென்றாலும் – அகப்பேய் – பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்த இடம் – அகப்பேய் – பாழது கண்டாயே
- பரம் - பரந்த அருவ இடம் - வானுலகம் - பரன் - உயர்திணை
- வானுலக நினைப்பில் இருந்தாலும், மண்ணுலக நினைப்புக்கு மாறிவிடுகிறாய்
- பரத்தைத் தாண்டிச் சென்றால் பாழ் (ஏதுமில்லா வெட்டவெளி)
52
பஞ்ச முகமேது – அகப்பேய் – பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி – அகப்பேய் – குருபாதங் கண்டாயே
- ஐந்து எழுத்துகளை, சிவனுக்கு ஐந்து முகங்கள் என்கின்றனர். இது எப்படிச் சரியாகும். குஞ்சிதபாதம் (தூக்கி வளைத்த காலடி) காட்டி அவன் ஆடுகிறான். அவன் என் குரு.
53
பங்கம் இல்லையடி – அகப்பேய் – பாதம் இருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் – அகப்பேய் – கண்டு தெளிவாயே
- அவன் அடி வெட்டவெளியில் ஆட்டம் காட்டுகிறது. கங்கை நீரில் அவன். - இவற்றை உன்னிப் பார்த்து உணர்ந்துகொள்.
54
தானற நின்றவிடம் – அகப்பேய் – சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே – அகப்பேய் – ஊனமொன்று இல்லையடி
- அவன் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் இடந்தான் சைவம். உடம்பு இல்லாமல் அவன் இருப்பதால் அவனுக்கு ஊனம் ஒன்றும் இல்லை.
55
சைவம் ஆருக்கடி – அகப்பேய் – தன்னை அறிந்தவர்க்கே
சைவ மானவிடம் – அகப்பேய் – சற்குரு பாதமடி
- சைவம் ஆருக்கு வேண்டும்? தன்னை அறிந்தவருக்குத்தான் வேண்டும். சைவம் (சிவம்) எங்கே இருக்கிறது? சற்குரு பாதத்தில் இருக்கிறது.
0
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
அகம் என்னும் தன் நினைவைப்
பேய்ப்பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு,
அவளை விளித்துக் கூறும் அறிவுரையாக,
பிறருக்குக் கூறும்
விளையாட்டுக் கண்ணி - பாடல் -- 55 / 90
No comments:
Post a Comment