Pages

Wednesday, 25 March 2026

அரசாட்சிப் பணியில் புலவர்

திருவாரூர்த் தத்துவப்பிரகாசர் பாடிய தனிப்பாடல்கள் பல தமிழ் நாவலர் திரட்டு நூலில் உள்ளன. இவரது நூல் எதுவும் கிடைக்கவில்லை. 

போலிப் புலவர்


புதுக்கவி சொல்லுவோம் என்று பிறர் கவிதைகளைத் திருடிப் பாடுபவர்கள் பலர் இருக்கின்றர். 

பிறர் கவிதைகளை விற்று அதன் ஆதாயத்தைப் பங்குபோட்டுக்கொள்பவர்கள் இருக்கின்றனர்.  

தேவாரம் படித்த  வாயால் போலிக் கிரந்தம் படிக்கின்றனர். 

பழங்குருக்களை மறந்து போலிக் குருக்களை நம்புகின்றனர். 

யாம் ஞானசம்பந்தர் அடியோம். 

வடமொழி வழியைப் பின்பற்றும் சமணத்தை நம்பமாட்டோம் 

- என்றெல்லாம் கூறும் திருவாரூர்த் தத்துவப்பிரகாசர் பாடல் இது.  

நினைவு கவி சொல்வோம் 
எனச் சொல்லி 
பிறர் கவிதை 
நினைவினைத் திருடி வையோம் 
நீடு உலகில் மனிதனைப் 
பாடுவோம் நாம் என்று 
நீள் வசைகள் பாட அறியோம் 
பினை இளைய நாவலருடன் 
பங்கு பேசிப் 
பிரபந்தங்கள் பாடிக் கொடோம் 
பேசுவது தேவாரமே அலால் 
வாய்க்கு எளிய 
பேய்க் கிரந்தங்கள் பேசோம் 
இனிமை தரு 
பூருவத்துக் குருக்களை மறந்து 
எட்டிடத்துத் தீட்சை போய் 
இட்ட சிறு பேர் மாற்றி 
மாதம் ஒரு பேர் இட்டு 
அழைக்க நாம் இறுமாந்து இரோம் 
தனி இருந்து எம்மைப் 
புறங்கூறுவார் பாடு 
தணியக் கவி பாடுவோம் 
சமண் நூல்களைப் 
பொருள் எனக் கொளோம் 
திருஞான சம்பந்தர் 
அடியர் நாமே.

தியாகராயர் திருவிழாக் கொடியை இறக்காதே


கிருட்டிண தேவராயர் மீது ஆணை

அவர் சார்பில் ஆட்சி நடத்தும் வடமலையார் மீது ஆணை

பாகற்கொடி அறுப்பார் (திருவாரூரார் மீது ஆணை

(திருவாரூருக்கு அருகிலுள்ள வேலங்குடிக்குச் சென்று பாகற்கொடியை அறுத்துவிட்டு மீளுதல் திருவாரூர் விழாவில் ஒரு சடங்கு. )

விழாக் கொடியை இறக்காதே

என்று திருவாரூர்த் தத்துவப்பிரகாசர் ஆணையிடுகிறார்

அவர் ஆணைப்படிக் கொடி இறக்கப்படவில்லை. 

இதனைத் தெரிவிக்கும் பாடல்

மருவு புகழ் கிட்ணமகாராயர் ஆணை
அரிய வடமலையார் ஆணை - திவாரூர்ப்
பாகற் கொடி அறுப்பார் பாதத் திரு ஆணை
த்யாகக் கொடி இறக்காதே.   

அரசர்க்கு ஓலை


இந்தச் செய்தியை எழுதி அரசர்க்கு ஓலை அனுப்புகிறார்.

திருவாரூர்த் தியாகராசருக்குப் பூசை முறையாகச் செய்யவில்லை.

செய்யாதவர் துலுக்கர் அல்லர். 

ஒட்டாரக்காரர் அல்ல. 

கோயில் பூசாரிகள். 

அரசே தெரிந்துகொள்.  

ஓலைப் பாடல் 

ஊழித் துலுக்கு அல்ல ஒட்டியான் தானுமல்ல 
வீழித் துலுக்கு வந்து மேலிட்டு - வாழி
சிறந்த திருவாரூர்த் தியாகருடைய  பூசை
இறந்ததே க்ருட்டிண ராயா

அரசன் தண்டனை


அரசன் கோயில் பட்டரைப் பணிநீக்கம் செய்துவிட்டான், 

உண்ட வயிற்றில் உமிக் காந்தலிட்டதே
தொண்டரே வீழித் துலுக்கரே - பண்டெல்லாம்
அப்பம் அவல் எள் அதிரசமும் தோசைகளும்
கப்புவதும் போச்சே கவிழ்ந்து.

சிலைத்திருட்டு


கோவில் பூசாரி நாகராச நம்பி 2 சிலைகளைத் திருடிக் கன்னானுக்கு விற்ற செய்தியை அரசனுக்குத் தெரிவித்த பாட்டு

முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார் அவரில் 
இந்நாள் இரண்டு பேர் ஏகினார் - கன்னான்
நருக்கின்றான் விற்றுவிட்ட நாகராச நம்பி
இருக்கின்றான் கிருட்டிண ராயா  

இப்படிப் பல பாடல்கள்

மு அருணாசலம், திருவாரூர்த் தத்துவப்பிரகாசர், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 271

No comments:

Post a Comment