குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் சிதம்பர வெண்பா. இதில் உள்ள 100 வெண்பாக்களும் சிதம்பர தேவா என்று முடிகின்றன. இது காப்பு 1 + 100 வெண்பா (101 வெண்பா) கொண்டது. அவற்றில் சில:
🔱
விரித்த சடாடவியும் வெண்ணீறும் மேய்யும்
தரித்த சிலம்பும் இரு தாளும் - சிரித்த
திருவாய் முகிழ் மலரும் தீவினையேன் காண
வருவாய் சிதம்பர தேவா
- உன் விரித்த சடைக்காடு, மெய்யில் வெண்ணீறு, காலில் சிலம்பு, சிரிக்கும் இதழ் ஆகியவற்றுடன் சிதம்பர தேவா நீ என்னிடம் வருக.
🔱
உறையும் பதி ஏது உரைத்து அருள வேண்டும்
நிறையும் தவத்தோர் நினைவோ - மறையின்
தலையோ கனக சபை தானோ கயிலை
மலையோ சிதம்பர தேவா
- சிதம்பர தேவா! நீ எங்கே இருக்கிறாய்?
- தவத்தோர் நினைவிலா
- மறையின் தலையிலோ
- பொன்னம்பலத்திலோ
- கயிலை மலையிலோ
- எனக்குச் சொல்ல வேண்டும்.
🔱
எடுத்த பிறப்பெல்லாம் எனக்கு வந்து தாய்மார்
கொடுத்த முலைப் பாலனைத்தும் கூட்டில் - அடுத்த விறல்
பல் நாகணைத் துயில் மால் பால் ஆழியும் சிறிதாம்
மன்னா சிதம்பர தேவா
- எத்தனையோ பிறவிகளில் எத்தனையோ தாய்மார்கள் எனக்கு ஊட்டிய முலைப்பால் அனைத்தையும் சேர்த்தால் திருமால் பள்ளி பள்ளிகொள்ளும் பால்கடலில் இருக்கும் பாலை விட அதிகமாக இருக்கும்.
வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 170
No comments:
Post a Comment