ஒட்டக்கூத்தரின் இராமாயணம் உத்ததரகாண்டம் நூலில் உள்ள இந்தப் பாடல்கள் தெரிவிக்கும் உலகியல் உண்மைகள்
யார் எதை விரும்புவர்
- உறவினர் குலத்தையும்
- தந்தை மகனின் கல்வி நலத்தையும்
- தாய் மகனின் செல்வத்தையும்
- பெண் கணவனின் அழகையும் - விரும்புவர்
குலம் வேண்டும் என்று இருப்பார் குலத்துள்ளோர்
கல்வியினால் குறையா ஞானப்
பலம் வேண்டும் என்று இருப்பார் தந்தைமார்
பரந்த பெரும் செல்வம் உள்ள
தலம் வேண்டும் என்று இருப்பர் தாய்மார்கள்
யவ்வனமும் அழகும் சார்ந்த
நலம் வேண்டும் என்று இருப்பார் நாறுகுழல்
கன்னியர் நலத்தின் மிக்கார்.
பெண்ணைப் பெற்றால் துயரம்
- பண்புள்ள குடிப்பிறப்பு
- யாரும் பழிக்காத பேரழகு
- பிறர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும் பாங்கு
- நீரைப் பிரித்து ஒதுக்கிவிட்டு, பாலை மட்டும் பருகும் அன்னம்போல் பிறர் கூறுவதில் உள்ள நுண்பொருளை உணர்ந்துகொள்ளுதல்
- இந்த 4-ம் உடையவர் உலகில் இல்லை.
- இப்படிப்பட்ட மாப்பிள்ளை இல்லாததால் பெண் பிள்ளைப் பேறு பெரிய துயரம் தரும் ஒன்று.
பண்புடைய குடிப்பிறப்பும் பழிப்பில்லாப்
பேரழகும் பரந்த கேள்வி
நுண்பொருளை நீர் ஒழியப் பால் நுகரும்
அன்னம் போல் நோக்கித் தீரும்
ஒண்பொருளும் இந்நான்கும் உடையாரைக்
கிடையாது இவ் உலகம் தன்னில்
பெண் பெறுகை போல் இந்த பெரிய துயர்
தான் உண்டோ பேசுங்காலே
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 327
No comments:
Post a Comment