Pages

Friday, 14 November 2025

அடியார்க்கு நல்லார்

முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம் நூலுக்கு அரும்பதவுரை என்று ஒன்று எழுதப்பட்டிருந்ததைக் கவனமாகப் பயின்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நெறியும் விளங்குமாறு அடியார்க்கு நல்லார் என்பவர் ஓர் உரை எழுதியுள்ளார். 

பருந்தும் நிழலும்

  • பருந்தும் நிழலும் போலப் பாவும் உரையும் அமையும்படி இவர் உரை எழுதியுள்ளார் என்று இவர் உரையில் காணப்படும் பாயிரப் பாடல் குறிப்பிடுகிறது. 

பருந்தும் நிழலும் எனப் பாவும் உரையும்
பொருந்து நெறி  எல்லாப் பொருளும் - தெரிந்து இப்
படியார்க்கு நல் அமிர்தம் பாலித்தான் நன்னூல்
அடியார்க்கு நல்லான் என்பான்.
சிலப்படிகாரப் பதிக உரையின் இறுதியில் காணப்படும் 3 பாடல்களில் முதல் பாடல். 

நிரம்பை என்னும் ஊரினர்

  • இவர் கொங்கு மண்டல, குறும்பு நாட்டு, நிரம்பை என்னும் ஊரினர் என்று ஒரு பாடல் தெரிக்கிறது. இந்த நிரம்பை விசயமங்கலத்துக்கு அருகிலிருந்த ஊர் என்று கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது.     

ஓரும் தமிழ் ஒரு மூன்றும் உலகு இன்புற வகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதிகாரத்தில் சேர்ந்த பொருள் 
ஆரும் தெரிய விரித்துரைத்தான் - அடியார்க்கு நல்லான் 
காரும் தருவும் அனையான் நிரம்பையர் காவலனே
மேற்டி இரண்டாவது பாடல் 

இவரைப் பேணியவர்  பொப்பண்ண காங்கேயர் கோன்
  
காற்றைப் பிடித்துக் கடத்தில் அடைத்து அக் கடிய பெரும்
சேற்றைக் குரம்பை செய்வார் செய்கை போலும்; அல் காலம் எனும் 
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கெயர் கோன் அளித்த
சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் முன்னுரை செய்வித்ததே.   
மேற்டி மூன்றாவது பாடல்

ஆனிலையப்பர் பெயர்

  • கருவூர் ஆனிலையப்பர் அடியார்க்கு நல்லார் என்று குறிப்பிடப்படுகிறார். இதனைக் குறிப்பிடும் பாடல்:

விண்ணுலா மதி சூடி வேதமே
பண்ணுலார் பரம் ஆய பண்பினார்
கண்ணுளார் கருவூரில் ஆனிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லாரே
சம்பந்தர் தேவாரம் 1766

இவரது பெயர் போல

இவரது பெயர் போலவே அமைந்த பெயர் கொண்டவர்கள் தமிழகத்தில் வாழ்ந்துவந்நதனர். 

அவர்கள்:

  • நச்சினார்க்கினியர்
  • அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்
  • சாம்பானுக்கு முத்தி அளிக்கும்படி, சிற்றம்பலவர் உமாபதி சிவாசிரியார் என்பவருக்கு எழுதிய பாட்டியல் நூல். 
  • அடியார்க்கு நல்ல பெருமாள் - 15-ஆம் நூற்றாண்டில் தொன்றிய கந்தரலங்காரம் முருகனை இப் பெயரிட்டு வழங்குகிறது. 

இதனைக் குறிக்கும் பாடல் 

குடியாப் பிறவிக் கடலில் புகார்; முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப் படார்; வெற்றி வேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள்; அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்வரே (பாடல் 33)  


மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 9 & 10

 

No comments:

Post a Comment