Pages

Monday, 24 November 2025

தொல்காப்பியம் - சொல்விளக்கம்

தொல்காப்பியம் செய்ததனால் 
அந்த நூல் இயற்றிய ஆசிரியன் 
தொல்காப்பியன் எனப்பட்டான் 


வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே  
இது தொல்காப்பியப் பாயிரம் 

தொல்காப்பியம்  என்பது காரணப்பெயர். 

தொன்மை காப்பு இயம் என்னும் 3 சொற்களின் தொகுப்பு (தொகைச்சொல்) தொல்காப்பியம்.

தொன்மை என்பது பழைமை. 
காப்பு என்பது பாதுகாப்பு
இயம் என்பது இசைக்கருவி 

தமிழ் மொழியின் தொன்மையைப் பாதுகாத்து இசைக்கும் கருவி தொல்காப்பியம். 

பாயிரம் சொல்கிறது


இதில் கூறப்பட்டுள்ள செய்யுள், நூல், புலம், பனுவல், ஐந்திரம் ஆகியவற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்யுள் என்பது எழுத்து வடிவம் பெற்ற படைப்புகள்.

நூல் என்பது இலக்கணப் படைப்புகள்.

புலம் என்பது உடலிலுள்ள புலன்களைப் போல, மொழியில் புலப்படுபவை. (இலக்கணம்)

பனுவல் என்பது தொல்காப்பியனின் படைப்பு (நூல்).
(தமிழ் கூறும் உலகத்தில் உள்ள வழக்கு என்னும் பஞ்சை, செய்யுள்  என்னும் தக்கிளியால் நூற்ற நூல் / பனுவல்)

ஐந்திரம் என்பது வடமொழி இலக்கண நூல்.
(இது பாணினி இலக்கணத்துக்கு முன்னர் தோன்றிய நூல்)
(இந்திரன் என்பவனால் செய்யப்பட்டது)
(பாணினியம் கி. மு. 3-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்)

தொல்காப்பியர் இந்த ஐந்திரம் கற்றவர்
(பாணினி காலத்துக்கு முந்தியவர்)

நிலம்தரு திருவின் பாண்டியன் (நிலம்தரு திருவின் நெடியோன்) அவையில் அரங்கேற்றினார்.

இவரது ஆசிரியர் அதங்கோட்டு ஆசான்.

இவர் சுட்டிய இடங்களுக்கு விளக்கங்கள் கூறிக்கொண்டு அரங்கேற்றினார்.

இதனால் தொல்காப்பியன் என்னும் பெயரை நிலைநாட்டிக்கொண்டார்.

தொல்காப்பியர் 
இயற்றிய நூலின் பெயர் 
தொல்காப்பியம் 


இதனால் தொல்காப்பியன் என்னும் பெயரை நிலைநாட்டிக்கொண்டார்
(எனப் பொருள் கொள்வதில்
இதனால் என்பதை நீக்கிவிட்டு) 
அவன் தொல்காப்பியன் என்னும் பெயரை நிலைநாட்டிக்கொண்டார்
எனக் கொள்ளவும் பாயிரம் இடம் தருகிறது. 

இதற்கு உரம் தரும் சான்றுகளும் உள்ளன. 

பதிற்றுப்பத்து - நாலாம்பத்து பாடல்களில், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர அரசனைப் போற்றிப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார் 

இவர் காப்பியாறு என்னும் ஊரினர் என்பதை இவர் பெயர் புலப்படுத்துகிறது. திருமாக்கூடல் என்னும் ஊரின் அருகில் காவிரியில் இந்தக் கபினியாறு ஆன்பொருநை, தண்ணான்பொருநை, அமராவதி என்றெல்லாம் வழங்கப்படுகிறது. 

கபிலை கண்ணிய புண்ணிய நிலை - என்னும்போது கபிலை என்னும் சொல் பசுவைக் குறிக்கிறது. இது ஆன்பொருநை என்னும் பெரோடு தொடர்புடையது. 

தாமான் தோன்றிக்கோன் கருவூரை அடுத்துள்ள தாமான் தோன்றி மலைப்பகுதியில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். தாவும் மான்கள் தோன்றும் மலை தாமான் தோன்றிமலை எனப்பட்டது போல, ஆனிரை (பசுக்கூட்டம்) பொருந்தியிருக்கும் ஆறு ஆன்பொருநை ஆறு. 

இந்தக் காப்பியாற்றங்கரையில் இருந்த ஊர் ஒன்றில் வாழ்ந்தவர் காப்பியாற்றுக் காப்பியனார்.  

காப்பியன் < காப்பியனார் என்பது ஒருவரின் பெயர் என்பது காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் பெயரால் அறியலாம். 

கபிலர் - தொல்கபிலர்
காப்பியர் - தொல்காப்பியர்
என்று கொள்ளலாமோ என்று தோன்றலாம். 

இது சிறப்பில்லாக் கருத்தோட்டம். 

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்.
இது நூலால் பெற்ற பெயர்.
இப்படிப் கொள்வதே சிறப்பு.  

அகத்தியர் செய்த நூல் அகத்தியம்.
இது ஆசிரியரால் நூல் பெற்ற பெயர்
இந்த முறைமையைத் தொல்காப்பியம் நூலுக்குக் கொள்வது வலிமை இல்லாத ஒன்று. 

No comments:

Post a Comment