வாழ்க்கை நிகழ்வுகளைத் தொல்காப்பியம் அகப்பொருள் புறப்பொருள் என்று பகுத்துக்கொள்கிறது.
காதலன், காதலி அல்லது கணவன், மனைவி உடலுறவு தொடர்புள்ள செய்திகளைப் பேசுவது அகம். இந்த உறவு பிறர் முன்னிலையில் நிகழாது. இவர்களின் மனத்தில் (அகத்தில்) இருக்கும். அதனால் இது அகப்பொருள்.
பிறர் காணுமாறு நிகழ்வது புறப்பொருள். ஒருவன் செய்யும் செயலின் விளைவு ஒரு சிலருக்குத்தான் பயன்படும். அரசன் செய்யும் செயலின் விளைவு நாட்டுக்கே பயன்படும். எனவே போர், கொடை முதலானவை புறத்திணையில் மிகுதியாகப் பேசப்படுகின்றன.
அறம் என்பது கொடை வழங்கும் செயல் மட்டும் அன்று. நல்லதைச் செய்தலும், நல்லவனாக நடந்துகொள்வதையும் குறிக்கும். இதுவும் மற்றவர் வாழ்க்கையைத் தாக்கும். மற்றவர்களுக்குத் தெரியும். எனவே புறம்.
அகப்பொருளை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பாகுபடுத்திப் பார்ப்பது தமிழ்நெறி.
கண்ணில் தெரியும் நிலம், கருத்தால் அளவிடும் காலம் இரண்டும் முதற்பொருள்.
இடத்தில் கருவுற்றுத் தோன்றும் பொருள் கருப்பொருள்.
உரிப்பொருள் என்பது செய்யுளுக்கு உரிய பொருள். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்கு உரிய உரிப்பொருள் என்று இலக்கண நூல்கள் காட்டுகின்றன. இது குறிஞ்சி நிலத்தில் மட்டும் நிகழ்வது அன்று. ஐவகை நிலங்களிலும் நிகழும்.
அது போல, பிரிதல், பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருத்தல், ஊடல், இரங்கல் நிகழ்வுகளும் எல்லா நிலங்களிலும் நிகழும். மரங்கள், விலங்குகள், பறவைகள் முதலான கருப்பொருள்களும் நிலம் மாறுவது உண்டு. இலக்கண நூல்கள் இவற்றைத் திணைமயக்கம் என்கின்னறன.
காலத்தை நாள், ஆண்டு என்று பிரித்துக்கொண்டு பகுத்துப் பார்க்கிறோம். பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்வது, சூரியனைச் சுற்றிவருவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தக் காலப் பிரிவுகள் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment