தாய் குழந்தை மணிவண்ணனுக்காக நிலவிடம் பேசுகிறாள்
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ.
நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ. 1
சுட்டி நெற்றியில் அசைந்தாடப் புழுதியில் தவழ்வதைப் பார்க்க வா
என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்து ஓடிவா. 2
என் சிறு குட்டன், எனக்கு அமுதம் பொன்றவன், தன் கைகளால் உன்னைச் சுட்டிக் காட்டி அழைக்கின்றான். அவனோடு விளையாட வேண்டுமாயின் மேகத்தில் மறையாதே
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடிவா. 3
ஒளிவட்டத்துடன் உன் முகத்தைக் காட்டினாலும் என் மகன் முகத்துக்கு ஒப்பாகமாட்டாய். உன்னைச் சுட்டிக் காட்டும் அவன் கை நோகாமல் வந்துவிடு.
சக்கரக் கையன் தடங் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வாகண்டாய். 4
மேல்மாடி ஒக்கலையில் (பாலகணியில்) இருந்துகொண்டு உன்னையே காட்டுகிறான். ஏமாற்றாதே. நீ மக்கள் பெறாத மலடன் இல்லையே?
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில ஆகாதே நின் செவி புகர் மாமதீ. 5
மழலை முற்றாத செஞ்சோல்லால் உன்னைக் கூவி அழைக்கின்றான். இது உனக்குக் கேட்கவில்லையா? நீ செவிடன் அல்லவே?
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண்துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ விரைந்து ஓடிவா. 6
என் மகன் கொட்டாவி விடுகின்றான். உறங்குவதற்குள் வந்துவிடு. உறங்கினால்தானே உண்ட பால் செரிமானம் ஆகும்?
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொருநாள்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந்து ஓடிவா. 7
பாலகன் என்று இவனை ஏளனம் செய்யாதே. முன்பு ஆலிலையில் வளர்ந்த சிறுக்கன் இவன். தானாகவே உன்னைப் பிடித்துக்கொள்வான்
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியைகாண்
நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான். 8
சிறுவன் என்று இகழாதே. சின்ன உருவம் மாவலி மன்னனிடம் செய்தது உனக்குத் தெரியாதா?
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ மகிழ்ந்து ஓடிவா. 9
நீ வராவிட்டால் தன் சக்கரத்தை உன்மேல் எறிந்துவிடுவான். எனவே வந்துவிடு.
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே. 10
பெரியாழ்வார் திருமொழி 1-4
No comments:
Post a Comment