குழந்தையின் மழலைப் பேச்சை விரும்பும் தாய் அவனைத் தூண்டுவதாக அமைந்துள்ள பாடல்கள் இவை. கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பேசத் தூண்டும் தாய் அவனது செயல்களைச் சொல்லி வேண்டுகிறாள்
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா.
ஊழிதோறூழி பல ஆலினிலை அதன்மேல்
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே.
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே.
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதிச்
செலவு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே. ஆடுக ஆடுகவே. 1
கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம்
குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய்.
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி
மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வர
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்
கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே.
ஆள. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே. ஆடுக ஆடுகவே. 2
நம்முடை நாயகனே. நான்மறையின் பொருளே.
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே. தரணி தலம் முழுதும்
தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே. வேழமும் ஏழ் விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே.
அம்ம. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே. ஆடுக ஆடுகவே. 3
வானவர் தாம்மகிழ வன்சகடம் உருள
வஞ்ச முலைப் பேயின் நஞ்சமது உண்டவனே.
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே.
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்
ஆனை. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே. ஆடுக ஆடுகவே. 4
மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்.
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன் முன்
முன்னம் முகத்தணியார் மொய்குழல் கள் அலைய
அத்த. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே. ஆடுக ஆடுகவே. 5
காயமலர் நிறவா. கருமுகில் போலுருவா.
கானக மாமடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா.
துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே.
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்.
ஆய. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே. ஆடுக ஆடுகவே. 6
துப்புடையயார்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பினை தன்திறமா நல்விடைஏழ் அவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே.
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதி புகத்
தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே. ஆடுக ஆடுகவே. 7
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப்பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள் சூழ்
சோலைமலைக்கு அரசே. கண்ணரத்து அமுதே.
என் அவலம் களைவாய். ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய். ஆடுக ஆடுகவே. 8
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைப் போல் சில பல் இலக
நீல நிறத்து அழகு ஆர் ஐம்படையின் நடுவே
நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே. ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய். ஆடுக ஆடுகவே. 9
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே. ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய். ஆடுக ஆடுகவே. 10
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையும் ஆனவனே. ஆயர்கள் நாயகனே.
என் அவலம் களைவாய். ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய். ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே. 11
பெரியாழ்வார் திருமொழி 1-6
செங்கீரைப் பருவம்
திருமால் கதைகளைத் தெளிக்கும் தொகுப்பாக இப்பகுதி அமைந்துள்ளது.
ReplyDeleteஆயர்கள் போரேறே என்றால் ஆயர்களை போர் செய்து வென்றவரா?
ReplyDeleteமதுரைக்காஞ்சி நெடுஞ்செழியனை 'தென்பரதவர் போரேறே' என்கிறது
இதை நீங்கள் உட்பட தென்பரதவரை வென்றவனே என்று விளக்கம் அளித்து உள்ளீர்கள்
சரியான விளக்கம் கிடைக்குமா அண்ணா
தொடர்புடைய பக்கத்தில் காணலாம்.
Delete