மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே. தாலேலோ
வையம் அளந்தானே. தாலேலோ. 1
மாணிக்கமும் வயிரமும் பதித்த தங்கத் தொட்டிலைப் பிரமன் அனுப்பியிருக்கிறான்
உடையார் கனமணி யோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே தாலேலோ. 2
மணி, மாதுளம்பூ, தெழ்கு - கோத்த தொட்டிலை ஈசன் அனுப்பியிருக்கிறான்
எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ
தாமரைக் கண்ணனே தாலேலோ. 3
இந்திரன் கிண்கிணி அனுப்பியிருக்கிறான்
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ. 4
வலம்புரிச் சங்கு, கிண்கிணி, சரிவளை, அரைஞாண் - அமரர்கள் அனுப்பியுள்ளனர்
எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ
தூமணி வண்ணனே தாலேலோ. 5
வச்சிர வண்ணன் மார்பில் அணிய ஐம்படைத் தாலி அனுப்பியிருக்கிறான்
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ
சுந்தரத் தோளனே தாலேலோ. 6
முத்தாரம், பவளவளையல் - கடலரசன் வருணன் அனுப்பியிருக்கிறான்
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ
குடந்தைக் கிடந்தானே தாலேலோ. 7
துளசி மாலை, கற்பக வாசிகை - திருமகள் அனுப்பியிருக்கிறாள்
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுதனுக் கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ
நாராயணா அழேல் தாலேலோ. 8
கச்சம், சுரிகை, காம்பு வளையல், உச்சிச் சுட்டி, பொற்பூ - மண்மகள் அனுப்பியிருக்கிறாள்
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ
அரங்கத்து அணையானே தாலேலோ. 9
கலை (ஆண்சிங்கம்) கொண்டவள் நானப்பொடி, மஞ்சள், சிந்தூரம், கண்ணுக்கு அஞ்சனம் - அனுப்பியிருக்கிறாள்
மணிவண்ணா! அழாமல் உறங்கு - என்று கூறி ஆய்ச்சியர் கண்ணனைத் தாலாட்டுகின்றனர்
No comments:
Post a Comment