Pages

Sunday, 15 November 2020

அச்சோ அச்சோ Hug me baby

தன்னை அணைத்துக்கொள்ள வருமாறு குழந்தையை ஆய்ச்சியர் அழைத்தல் 

கலித்தாழிசை

பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னியல் ஓசை சலஞ்சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்து எதிர்வந்தாற் போல்
என்னிடைக் கோட்டரா அச்சோ அச்சோ
எம்பெருமான். வாராய் அச்சோ அச்சோ. 1

செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்பச்
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய --- (ஐம்படைத் தாலி அடைவுகள்)
அங் கைகளாலே வந்து அச்சோ அச்சோ
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ. 2

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனே. அச்சோ அச்சோ
ஆயர் பெருமானே. அச்சோ அச்சோ. 3

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன
தேறி அவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய். அச்சோ அச்சோ
எம்பெருமான். வாராய் அச்சோ அச்சோ. 4

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழல் உற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை
அழல விழித்தானே. அச்சோ அச்சோ
ஆழியங் கையனே. அச்சோ அச்சோ. 5

போர் ஒக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய். செழுந்தார் விசயற்காய்
கார் ஒக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே.
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
ஆயர்கள் போரேறே. அச்சோ அச்சோ. 6

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே. அச்சோ அச்சோ
சங்கம் இடத்தானே. அச்சோ அச்சோ. 7

என் இது மாயம்? என்னப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே. அச்சோ அச்சோ
வேங்கட வாணனே. அச்சோ அச்சோ. 8

கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக் காற்றா முகில் வண்ணாவோ. அன்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே. அச்சோ அச்சோ
மார்வில் மறுவனே. அச்சோ அச்சோ. 9

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே. அச்சோ வச்சோ
அருமறை தந்தானே. அச்சோ அச்சோ. 10

தரவு கொச்சகக்கலிப்பா

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள்விசும்பு ஆள்வரே. 11

பெரியாழ்வார் திருமொழி 1-9 
அச்சோ பருவம் 


No comments:

Post a Comment