Pages

Sunday, 1 October 2017

சிலப்பதிகாரம் 27-16 Silappathikaram 27-16

வளவன் கிள்ளி செங்குட்டுவனின் மைத்துனன்
மணக்கிள்ளி செங்குட்டுவனின் தாய்

‘நீடு வாழியரோ, நீள் நில வேந்து!’ என,
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்: ‘நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்;
வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!

மாடலன் செங்குட்டுவன் செயலைப் பாராட்டிக்கொண்டு சொல்கிறான். 
நீள் நில வேந்தே! நீடூழி வாழ்க!
உன் மைத்துனன் வளவனாகிய கிள்ளியோடு பகை கொண்டிருந்த ஒத்த பண்பினை உடைய ஒன்பது பேர், உன் மைத்துனன் போல இளவரசு பட்டம் பெற முடியாமல் பொறாமை கொண்டு, சோழவள நாட்டை அழிக்கும் உள்ளத்துடன் போரிட்ட போது, அவர்கள் ஒன்பது பேரின் வெண்கொற்றக் குடைகளையும் ஒரு பகலிலேயே ஒழித்து, ஆட்சிச் சக்கரத்தை உன் மைத்துனன் கிள்ளி பெறுமாறு செய்த அரசே! நீ வாழ்க!

ஒப்புநோக்குக

வெந்திறல்
ஆராச் செருவின் சோழர்குடிக்(கு) உரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயில்புறத்(து) இறுத்து
நிலைச்செருவின் ஆற்றலை அறுத்து (பதிற்றுப்பத்து பதிகம் 5)

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை

No comments:

Post a Comment