Pages

Tuesday, 29 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 2-3

கோவலன் கண்ணகி தோளில் தொய்யில் எழுதுதல் 

ஈக்கள் தேன் உண்ணும் புத்தம்புதுப் பூக்கள் மெத்தையில் பரப்பப்பட்டிருந்தன. கண்ணகியின் தோளில் கரும்பு, கொடி ஆகிய உருவங்களைத் தொய்யிலாகக் கோவலன் எழுதினான். உலகுக்கெல்லாம் ஒளி தரும் ஞாயிறும் திங்களும் சேர்ந்து ஒளியுடன் திகழ்வது போலக் கோவலனும் கண்ணகியும் விளங்கினர். மல்லிகைப் பூவாலான தாரைக் (ஆண்கள் அணியும் மாலையைத் தார் என்பர்) கோவலன் அணிந்திருந்தான். செங்கழுநீர்ப் பூவால் ஆகிய மாலையைக் கண்ணகி அணிந்திருந்தாள். இந்த இரண்டு மாலைகளும் ஒன்றோடொன்று மயங்குமாறு இருவரும் தழுவிய நிலையில் கோவலன் கண்ணகியின் முகத்தைப் பார்த்துக் குறிப்பில்லாமல் தீராத  காதல் உணர்வில் கூறலானான்.
 
கோவலன் கண்ணகி தோளில் இது போன்று கரும்பு உருவும், கொடி உருவும் எழுதினான்
பாடல்

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:    

புகார்க் காண்டம் \ 2. மனையறம் படுத்த காதை
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்


No comments:

Post a Comment