Pages

Monday, 28 November 2016

நற்றிணை Natrinai 244

குளிர்ந்த பெருமலைச் சாரலில் பொழிந்த மழையால் கூதிர் (குளிர்) காலத்தில் பூக்கும் கூதளம் பூ (தாளிப் பூ) மணம் வீசும். 

பூவின் மீது உள்ள ஆசையால் வண்டு மொய்க்கும் இனிய குரலை யாழிசை என மயங்கி அசுணமா என்னும் பறவை கேட்டுக்கொண்டிருக்கும். 

இப்படிப்பட்ட மலைநான் என் தலைவன்.

நீலமணி போலத் தோன்றும் மலைக்கு அழகூட்டிக்கொண்டு 
உயர்ந்து வளர்ந்திருக்கும் செயலைத் (அசோகு) 
தளிர் போன்ற என் மேனி 
மதமதப்புத் (மதன்) தன்மை கெட்டுப் 
பசலை நிறம் பெற்றிருப்பதை நீ பார்க்கிறாய்.

இதனை அந்த மலைநாடனுக்குச் சொல்லிக் குறையைப் போக்கிக்கொள்ளுதல் ஒருவகை. 

அதனை நீ செய்யவில்லை.

என் துயரம் என் தாய்க்குத் தெரியாது. 
அவளுக்குத் தெரியுமாறு எடுத்துரைத்து 
நோயைத் தணித்துக்கொள்வது மற்றொரு வகை. 

அதனையும் நீ செய்யவில்லை.
ஆதலால், தோழி! கொடியவள்.

தலைவி தோழியிடம் இவ்வாறு சொல்லி அவளைக் கடிந்துகொள்கிறாள்.

யாழின் இசை அசுணமா விலங்குக்கு இன்பம் தரும். அதனைக் கொல்பவர் யாழை மீட்டுவர். அது மயங்கிக் கேட்கும்போது கொன்று உணவாக்கிக் கொள்வர். இப்போது யாழிசை அசுணமாவுக்குத் தீதாயிற்று. இதனை மற்றொரு பாடல் தெரிவிக்கிறது. 
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே, (நற்றிணை 304)
  
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ     5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது'' என உரைத்தல் ஒன்றோ
செய்யாய்: ஆதலின் கொடியை தோழி!
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்     10
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.
கூற்றங்குமரனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


கூதளம் என்னும் கூதிர் காலத் தாளிப் பூ 

No comments:

Post a Comment