Pages

Monday, 29 August 2016

அகநானூறு Agananuru 217

பனியில் பற்கள் படபடக்கின்றன.

1
வெண்மழை – பனி, பொழிந்து உடம்பைப் பொத்தவைக்கிறது. வில்லால் அடித்த பஞ்சு போல் பனி கொட்டிக் கிடக்கிறது. மழைநீர் துவலையாகத் தூவும் பருவம் போய்விட்டது.

கரும்புப்பூ – பூளைப் பூ போல, கரும்புப் பூ வெள்ளை நிறத்தில் பூத்து, வயலில் வலிமையான காம்பில் வாடைக்காற்றில் அசைந்தாடுகிறது.

பகன்றை – பச்சை இலைகளுடன் புதரில் பூத்துக் குலுங்குகிறது. நீலம் கலந்த பச்சைநிறம் மாறிப் பூத்துக் கிடக்கிறது. தோலில் பதித்த வட்டக் கண்ணாடி போல் வெள்ளை நிறத்தில் மலர்திருக்கிறது.

அவரை – கோழிக்கால் போன்ற கொழுத்த இலைகளோடு மொட்டு விட்டுப் பூத்திருக்கிறது.

தோன்றி – உதிரும் பூவாகிய தோன்றி மலர்கிறது.

குருகு – குருகுப் பறவைக் குளிரில் குரல் எழுப்புகின்றன.

கணவனைப் பிரிந்து வாழும் மகளிர் தம் அணிகலன்களைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிரில் நடுங்குகின்றனர்.
இப்படிப்பட்ட நிலைமையை உண்டாக்கிக்கொண்டு அற்சிரப் பருவம் (பனிப் பருவம்) வந்துவிட்டது.
2
“எத்தகைய பொருளைப் பெறுவதாயினும் துணைவியை விட்டுவிட்டுப் பிரியாதீர்கள்” என்று துணைவியுடன் வாழ்பவர்களுக்கு நாம் சொல்லுவோம்.

தோழி, வாழ்க.

என் நலனை உண்டவர் மீண்டும் எனக்குத் தன்னைத் தராமல், விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். 

என் உடம்பு பாழ்பட்டுக் கிடக்கிறது. 
துன்ப மலர் நெஞ்சில் பூத்துக்கொண்டிருக்கிறது

அவரது புணர்ச்சியை விரும்பி என் பற்கள் தீப் பறக்க முறுக்கிக்கொண்டு நடுங்குகின்றன. 
பனியில் அடித்துக்கொள்கின்றன. 

நீ பிரிந்தால் கடும்பனியில் மேலும் துன்புறுவேன்.
பிரிய வேண்டாம் என்போம், என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
''பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
துவலை தூவல் கழிய, அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,         5
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,         10
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
2
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ'' எனச்
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;                15
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறு தீப் பிறப்பத் திருகி,
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.               20

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.
கழார்க்கீரன் எயிற்றியார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பூத்திருக்கும் கரும்பு 

பூளை | பூளாப்பூ

No comments:

Post a Comment