Pages

Thursday, 28 July 2016

பரிபாடல் Paripadal 18

தொடைநலம் துள்ளி விளையாடும் பாடல் இது. “நாங்கள் உன் காலடியில் கிடக்கிறோம். நீ எங்கள் சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும்” என்று திருப்பரங்குன்ற முருகனை வேண்டுகின்றனர்.
திருப்பரங்குன்றம்
1
கார் காலத்தை விரும்பி ஏற்கும் மழைமேகம் போல போரை விரும்பி ஏற்று, நீர் சமன்பட்டுக் கிடக்கும் கடலில் சூரபன்மனைக் கொன்ற வேலை உடையவனே! உன் சிறப்பாகிய குன்றம் நிற்பது போல் உன் திருப்பரங்குன்றம் நிற்கிறது.
2
அவன் (ஒருவன்) மயிலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதனைக் கண்ட அவள் (ஒருத்தி) “உன் எண்ணம் தெரிகிறது. என்னை ஏளனம் செய்யாதே” என்றாள். “காதல் கனியே, உன் நெஞ்சிலுள்ள களவு எண்ணத்தைத் தெரிந்துகொண்ட மயில் தன்னால் உன்னைப் போல் காதல் கொள்ள முடியவில்லையே என்று ஏங்கி ஆடுவதைத்தான் பார்த்தேன், நீ என்னை வேறு வகையில் பார்க்கிறாய்” என்று சொல்லி அவன் அவள் ஊடலைத் தணித்தான். இப்படி நிகழும் குன்றம் அது.
3
யாழில் நைவளப் பண் பாடிக்கொண்டு பொய்யை வளமாகப் பேசும் பாண! குன்றம் ஐந்திணை வளங்களும் கொண்டது. மை தீட்டிய மலர்க்கண்ணார் அரவணைத்த வடு உன் தலைவன் மேல் படிந்துள்ளதைப் பார். அவனும் அவளும் ஒருவரை ஒருவர் மொய்த்துக்கொண்ட முயக்கம் (அணைப்பு) அது. நான் கையும் களவுமாக கண்டுபிடித்துவிட்டேன். அவன் மெய்யை வளப்படுத்திய பொன்னணி எங்கே? (அவளுக்குக் கொடுத்துவிட்டான்).
4
மரங்கள் தளிர்த்திருக்கின்றன. அதனை உரசிக்கொண்டு மழை மேகங்கள் மேய்கின்றன. இப்படி மலை கண்ணை விரித்துப் பார்க்க வைக்கிறது. அடர்ந்த இருளைக் கொடிமின்னல் கிழிக்கிறது. வெண்ணிறம் சுடரும் வேலை உடையவன் வேளன் (முருகன்). அவன் மலையில் தோன்றும் ஞாயிறு நெற்றியில் ஓடை கட்டியிருக்கும் அவன் களிறு போல் தோன்றுகிறது. அவனது அம்பலத்தில் காமவேள் காம மலரம்புகளை எய்கிறான்.
நிறை நாழி
5
அவன் வேலிலும் அம்பிலும் அழகு ததும்பும். நிறைநாழி போல் அவன் மலையில் காடுகள் நிறைந்திருக்கும். மலையில் உள்ள சுனையில் கார்மேகமும், நீரும் ததும்பும். அவன் அணிந்திருக்கும் பூ அணியில் அழகு செறிந்து ததும்பும். போரில் தோற்றுக் கட்டுண்டு கிடப்பவர் போல காந்தள் மலர் முறுக்முடன் ததும்பும். அவர்களின் கை விரிவது போல காந்தள் மொட்டு விரியும். யாழின் நரம்பு தும்பியானது பூவில் ஊதும் ஓசை போல இசை எழுப்பும். அச்சிரம் போல மழை கால் தொங்கிப் பொழியும். மழை பொழிவை இந்திரனின் வானவில் காட்டும்.
6
வில்லிலிருந்து அம்பு பாய்வது போல மலர்கள் கொட்டும். வட்டு உருட்டும் வல்லவனே கேள். சொக்கட்டான் என்றும் தாயம் என்றும் கூறப்படும் வல்லு விளையாட்டில் மலைமேல் வைத்த மரமாகிய காயை தொடரும் மரமாகிய காய் வெட்டமுடியாது. 12 போடும் நெட்டுருட்டால் பயனில்லை. அதுபோல முருகன் குன்றத்தில் உள்ள மரங்களை யாரும் வெட்டமாட்டார்கள். அவன் முரசு போரில் முழங்குவது போல முழங்கும். மழை மேகங்கள் தொகுதியாகி இடியாக முழங்குவது போல முழங்கும். அருவி கொட்ட அதன் நீர் முத்துக்களால் வரை அணி பெற்றுத் திகழும். தினை குரல் (கதிர்) விட்டிப்பதால் குருவிகளின் ஆரவாரம் கேட்கும். மயில்-எருவை கோத்துக் கூட்டமாக நிறையும்படி வானவில் மலையில் தோன்றும். வரி வரியாக வண்டுகள் மொய்ப்பதால் சுனை கூனி வளையும். யாழின் முறுக்கிய நரம்பில் பண்ணோசை எழும்பும். பூ, விளக்கு, புகையும் அகில், சந்தனம் ஆகியவை மணம் கமழும்.
7
“போரிடும் வேல்-படை கொண்ட செல்வனே! உன் மிதியடியாக நாங்கள் நீ வாழும் ஊருக்கு வந்திருப்பது போல நீ எங்கள் சுற்றத்தாருடனேயே இருக்க வேண்டும்”. இவ்வாறு வேண்டுகின்றனர்.


பாடல்சொல் பிரிப்புப் பதிவு
18. செவ்வேள்
1
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,         5
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.
2
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:
'உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, நீ எம்மை
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து,                          10
அவன் 'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்
பேதுற்ற இதனைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு.
3
வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல்,     15
மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,
கை வளம் பூத்த வடுவொடு, காணாய் நீ?
மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:
மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம   20
பூத்தன பாணா! நின் பாட்டு.
4
தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,
இருள் போழும் கொடி மின்னால்    25
வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் மேல் ஞாயிறு! நின்
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.
5
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி     30
சூர் ததும்பு வரைய காவால்,
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,
ஏர் ததும்புவன பூ அணி செறிவு.
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
காந்தள், செறிந்த கவின், 35
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை.
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே,
வச்சிரத்தான் வான வில்லு.
6
வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின    40
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
போர் ததும்பும் அரவம் போல,
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்.             45
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;
எருவை கோப்ப, எழில் அணி திருவில்
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
கூனி வளைத்த சுனை.     50
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
7
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,  55
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே!

கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
                               
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment