Pages

Wednesday, 27 July 2016

பரிபாடல் Paripadal 16

“வையை வறண்டுபோகாமல் இருக்க வானம் பொழியட்டும்” என்று மக்கள் படையலிட்டு வேண்டிக்கொண்டனர்.
புனலாடல் | ஆற்றில் நீராடும் விழா
1
வையை ஆற்றில் நீர் பெருக்கெடுது வருகிறது. அதன் கரை வழங்கும் வள்ளலின் கை போன்று தோன்றுகிறது. மிளகும், சந்தனமும் அடித்துவரப்படுகின்றன. நெய்யும் தயிரும் போல் நுரை மிதக்கிறது. பிறவும் அடித்துவரப்பட்டு எங்கும் கிடக்கின்றன. துறையில் பலரும் நீராடுகின்றனர். முத்துப் பதித்த மாலை, முத்துமாலை, பொன்னணி, மணி பதித்த அணி, வயிற்றில் அணியும் வலஞ்சுழி, தலையில் அணியும் முஞ்சம் முதலான அணிகலன்களுடன் வந்து சிறுவர்கள் ஒத்த பருவத் துணைவருடன் நீராடுகின்றனர். தாவிப் பாய்ந்து அரித்துத் தின்னும் கண்ணினை உடையவர்கள் வருகின்றனர். வயல்களில் பூக்கள் மிதக்கின்றன. கும்மாள இசையுடன் அரங்கில் ஆடுகின்றனர். பூங்காவில் வண்டுகள் பல்குகின்றன. நரந்தம் பூக்கள் மிதக்கின்றன. புனலை எதிர்கொள்வது போல, பூங்கா, குளம், ஆற்றுத் துருத்தி ஆகிய இடங்களெல்லாம் தேன் உண்ணும் வண்டுகளுடன் பூத்துக் குலுங்குகின்றன.
2
தோழிமார் சுருங்கையால் நீரை விசிறும்போது பரத்தை ஒருத்தி முலையில் இருக்கும் நீரைத் துடைக்காமல் நின்றாள். பெருந்தகை வீரன் ஒருவன் வருவதைப் பார்த்து முந்தானைத் துணியால் துடைத்துக்கொண்டாள். அவனை அணைக்கவேண்டும் என்று புன்னகை பூத்தாள். தோழியர் அவள் புன்னகைக்கு ஒத்தூதினர். கடலில் கலக்கும் ஆறு போல அவனும் அவளும் ஏறித் தழுவினர். களிப்புத் தரும் தேனைப் பரிமாறிக்கொண்டனர். குங்கும நீர்க் குருதியைத் துடைக்காமல் இணைந்தனர். ஒருவருக்கொருவர் இனியர் ஆயினர். இதனைப் பார்த்து வையைப் பெண் நாணினாள்.
சுருங்கை | எக்கி
3
மலையருவி மரங்களின் பூங்கொத்துகளை அழகாக்கியது. மகளிர் கூந்தலில் சூடிய பூக்களும், மைந்தர் மாலையிலிருந்த பூக்களும் ஒன்றில் ஒன்று தாவின. அவை மிதந்து வரும் வெள்ளமானது, மீன்-மாலையைச் சூடிக்கொண்டு கங்கையாறு வருவது போல் இருந்தது. தேனீக்கள் ஒலிக்கும் வையையின் இயல்பு, இவ்வாறு ஆயிற்று.
4
அவள் கண்மீனில் இருப்பது கள்ளா, புனலா, புலவியா என்று மயங்கும்படி எல்லாமுமாய் அவள் கண் இருந்தது. வண்டினம் மொய்க்கும்படித் தேன் கலந்து புனல் ஓடிற்று. புனலாடுவோர் ஆங்காங்கே அரவணைத்துக்கொண்டனர். மகள் அப்பியிருந்த மன்மதச் சாந்து மகனின் மார்பில் ஒழுகிற்று. எக்கியில் நீர் பீச்சுவதால் இப்படி ஒழுகிற்று. அப்போது அவன் மார்பு தேன் ஒழுகும் மலர் போல் காணப்பட்டது. இது வையைக்கு இயல்பு.
5
மலையில் மேகங்கள் நிறைந்தன. அதனால் வையையில் அலைகள் மோதின. புனலில் மகளிர் ஆடினர். அவர்கள் தலையில் கண்ணியும், மார்பில் மாலையும் அணிந்திருந்தனர். பண்ணிசைகள் முழங்கின. அந்த இசையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக மகளிர் ஆடினர். அவர்கள் வையை ஆற்றை வேண்டிக்கொண்டனர். “மழையும் (உறை), மணக்கும் சந்தனமும், மாலையும், பூசையில் பூக்கும் புகையும், படைக்கும் அவியலும் காய்ந்து போகாமலும், மாறாமலும் இருப்பதற்காக வானம் பொழிந்து, வெள்ள வறட்சி இல்லாமல் வையை  விளங்குவதாகுக” என்று வேண்டிக்கொண்டனர்.

முனைவர் பாண்டியன் தரும் ஆங்கில மொழியாக்கம்

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
16. வையை
1
கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
எவ் வயினானும் மீதுமீது அழியும்.
துறையே முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,                          5
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே. 10
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே 15
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.
கான் அல்அம் காவும், கயமும், துருத்தியும், தேன்
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்
பூத்தன்று வையை வரவு.
2
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,      20
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,
இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை;
பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர்
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்    25
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,
மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,
குருதி துடையாக் குறுகி, மரு(), இனியர்,
'பூத்தனள் நங்கை; பொலிக!' என நாணுதல் 30
வாய்த்தன்றால் வையை வரவு.
3
மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்
கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்;                 35
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,
தேன் இமிர் வையைக்கு இயல்பு.
4
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை,                40
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,
செல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத்   45
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்
கொடித் தேரான் வையைக்கு இயல்பு.
5
வரை ஆர்க்கும் புயல்; கரை
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர்,     50
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்
நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,
பூத்த புகையும், அவியும் புலராமை
மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்
வறாஅற்க, வையை! நினக்கு.   55

காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறு கூறி, வாயில் மறுத்தது.

நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்
                               
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment