![]() |
| திருமாலிருங்குன்றம் | அழகர் மலை |
திருமாலும் பலராமனுமாக, கறுப்பும் வெள்ளையுமாக,
ஓருருவில் விளங்கும் தெய்வம் மாலிருங்குன்றத்தில் (அழகர்
மலை) உள்ளது. அதற்கு மிதியடியாக நீங்கள் விளங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்,
என்று இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
1
துறக்கம் என்னும் வீடுபேறு தருவது திருமாலிருங்குன்றம்.
நேமி முதல்வனாகிய திருமாலின் புகழ் அறிவுக்குப் புலப்படாது. இவன் நிலவுலகைத் தாங்குபவன்.
இவன் குடிகொண்டிருக்கும் குன்றத்தின் புகழைப் புலவர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். புலவர்கள்
ஆய்ந்து கூறிய இடங்கள் பல. பலவற்றுள் நிறைந்த பயனை நிலையாகத் தரும் குன்றுகள் சில.
சிலவற்றுள் தெய்வம் குடிகொண்டுள்ள குலவரை சில. அவற்றுள் இருங்குன்றத்தில் ஒருதொழில்
புரியும் இருவர் குடிகொண்டுள்ளனர். ஒருவர் திருமால். மற்றொருவர் பலராமன். திருமால்
கடல் போன்றவர். பலராமன் கடல்சார் கானல்-நிலம் போன்றவன். இருவரும் சொல்லும் பொருளும்
போலப் பிரிக்க முடியாதவர்கள். இந்தக் குன்றத்தில் இருக்கும் துளசி மாலையன் துறக்கம்
எளிதாகத் தருபவன். துறக்கம் பெற அவனைப் போற்றிப் புகழ்வோம்.
2
பாம்பிலே பள்ளிகொண்டிருக்குக்கும் யானை போல்
விளங்குபவன் திருமால். அவன் அண்ணன் (தம்முன்) மராமலர்
மாலை அணிந்தவன். சிலம்பாறு பாயும் சோலை (பழமுதிர் சோலை)
இங்கு உள்ளது. இந்த அருவிச்செல்வம் பெற்றது இந்தக் குன்றம். விரும்பிய ஆசையை விதைத்து
விளைவித்துக்கொள்ளும் நலம் பெற்றது இந்த வியப்புக்குரிய ‘இருங்குன்றம்’. இங்கு நீரில்
வெயில் படுவது போலப் பலராமன் இருக்கிறான். பொன்னாடை உடுத்திக்கொண்டு இருள் உறங்குவது
போலத் திருமால் இருக்கிறான். இந்த மலையை நினையுங்கள். மறந்தவர்கள் கேளுங்கள். இங்கே
இவர்களின் புகழ் மணக்கிறது.
3
நீர்ச்சுனைகளில் நீலம், நிலமரங்களில் செயலை
என்று எங்கும் ஒரே பூ மலர்ச்சி. வேங்கை பூத்துக் கிடக்கும். காயும் கனியும் தோய்ந்து
கிடக்கும். இதனால் இந்த மலையே திருமாலைப் போல் விளங்கும்.
4
இதனைச் சென்று தொழுங்கள். முடியாதவர் கண்டு
மகிழுங்கள். ’இருங்குன்று’ என்பது இதன் பெயர். பழங்காலம் முதல் புகழ் பெற்றுத் திகழ்வது.
அறியாமையைப் போக்கும் காமக் கடவுள் இங்கு உள்ளார்.
5
இந்த மலையில் குழந்தையைத் தழுவிக்கொண்டு
மந்தி பாயும். முல்லை மலரும். நீர் சார் கிளைகளில் மயில் அகவும். குருகு இலைகளை உதிர்க்கும்.
குயில் கூவும். குழல், பாண்டில், முழவு ஆகியவை எதிரொலிப்பது போல சிலம்பாற்று இசை முழங்கும்.
இது பகைவரை வென்று அழித்தவன் இருக்கும் குன்று.
6
மகளிர், பெற்றோர், கைப் பிள்ளைகள், காதல்-தோழர்
ஆகியவருடன் சென்று தெய்வத்தையும், திசையையும் தொழுது செல்லுங்கள். திருமால் தாமரை போன்ற
கண்ணை உடையவன். இருளில் மரமல்லிகை பூத்துக் கிடப்பது போன்ற மேனி கொண்டவன் (பலராமன்). எந்த இடத்திலும் தோன்றித் துன்பம் களைபவன்.
அன்பு உள்ளங்களை மேய்ப்பவன்.
7
அங்கே, கருங்குன்றம் (திருமால்) பசுந்துளசி அணிந்திருக்கும். திருமால் குழை
அணிந்திருப்பான். கருடன்-கொடி அங்கே பறக்கும். பரசுராமனின் நாஞ்சில் இருக்கும். வாசுதேவனின்
தண்டாயுதம் இருக்கும். கண்ணனின் சங்கு, சக்கரம் இருக்கும். இராமனின் வில், அம்பு இருக்கும்.
அவர்களுக்கு விசிறும் ஆலவட்டம் இருக்கும்.
8
பெரும்பெயர் பெற்ற கண்ணன் பலராமன் ஆகிய இருவரும்
இங்கு உள்ளனர். நல்லது செய்யுங்கள். வாயால் அவர்களின் பெயரைச் சொல்லுங்கள். உள்ளம்
ஒன்றிச் சொல்லுங்கள். “இருங்குன்றத்துக் காலடி அணிகலனாக என்னைச் சேர்த்துகொள்” என்று
தொழுது வேண்டிக்கொள்ளுங்கள்.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
15. திருமால்
1
புல வரை அறியாப்
புகழொடு பொலிந்து,
நில வரை தாங்கிய
நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல்,
தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த
புனை நெடுங் குன்றம்
பல எனின், ஆங்கு
அவை பலவே: பலவினும், 5
நிலவரை ஆற்றி, நிறை
பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும்
குன்று அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின்
மை படி குடுமிய
குல வரை சிலவே:
குல வரை சிலவினும் 10
சிறந்தது கல் அறை கடலும்
கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும்
போலவும்,
எல்லாம் வேறு வேறு
உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு
இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன்
நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ, வீறு
பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம்
மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை
ஏத்துகம், சிலம்ப.
2
அரா அணர் கயந்
தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த் தாரின்
மாண் வரத் தோன்றி, 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு
இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு
திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம்
வித்துபு விளைக்கும்
நாமத் தன்மை நன்கனம்
படி எழ, 25
யாமத் தன்மை இவ்
ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள
வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன்
புணர்ந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!
3
சுனையெலாம் நீலம் மலர, சுனை
சூழ் 30
சினை யெலாம் செயலை
மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை
ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன்
நிலைத்தே.
4
சென்று தொழுகல்லீர்! கண்டு
பணிமின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத்
தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும்
காமக் கடவுள்.
5
மக முயங்கு மந்தி
வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை
முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல்
நீர்ச் சினை மட மயில்
அகவ, 40
குருகு இலை உதிர,
குயிலினம் கூவ,
பகர் குழல் பாண்டில்
இயம்ப அகவுநர்
நா நவில் பாடல்
முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது
ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ்
இருங்குன்று. 45
6
தையலவரொடும், தந்தாரவரொடும்,
கைம் மகவொடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை
தொழுதனிர் செல்மின்
புவ்வத் தாமரை புரையும்
கண்ணன்,
வௌவல் கார் இருள்
மயங்கு மணி மேனியன், 50
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம்
களைவோன்
அன்பு அது மேஎய்
இருங்குன்றத்தான்.
7
கள் அணி பசுந்
துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு
குழையவை; 55
புள் அணி பொலங்
கொடியவை;
வள் அணி வளை
நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு
ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய
அம்பினவை; 60
புகர் இணர் சூழ்
வட்டத்தவை; புகர் வாளவை:
8
என ஆங்கு
நலம் புரீஇ அம்
சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம்
உள் அமர்ந்து இசைத்து, இறை,
'இருங்குன்றத்து அடி உறை இயைக!'
என, 65
பெரும் பெயர் இருவரைப்
பரவுதும், தொழுதே.
கடவுள் வாழ்த்து
இளம்பெருவழுதியார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:
Post a Comment