Pages

Thursday, 7 July 2016

நற்றிணை Natrinai 149

கொண்கனொடு செலவு அயர்ந்திசினால் யானே


மூக்கின் மேல் விரல் வைத்துக்கொண்டு பெண்கள் சிலரும் பலருமாகக் கூடிக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு சாடைமாடையாக அம்பல் பேசித் தூற்றுகின்றனர். 

தாய் சிறிய கோலைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஓட என்னை அடிக்கிறாள். 

இதனால் நான் நொந்துபோய்க் கிடக்கிறேன்.

தோழி, இதைக் கேள்.

நள்ளிரவில் அவர் தேரில் வருவார். 
அவருடன் நான் சென்றுவிடுவேன். 
இந்த ஊர் அலர் பேசிப் பேசி அழுது தொலையட்டும். 
இவ்வாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள்.  
  • தேர் – கத்தரித்த கழுத்து மயிர் கொண்ட குதிரை பூட்டிய தேர் வரும். கானல் நிலத்தில் வரும். அங்குப் பூத்திருக்கும் புதுப் பூக்களின் மேல் ஏறி மணம் கமழும்படி வரும்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே

தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது 
சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்
உலோச்சனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

இவள் தாவாயில் கை
வைத்துக்கொண்டு
வியக்கிறாள்
பாடல்
மூக்கின் மேல்
கை வைத்துக்கொண்டு
வியந்ததாகக்
கூறுகிறது

No comments:

Post a Comment