Pages

Monday, 25 July 2016

குற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 3

உலாக் காணும் பெண்களின் நிலை எப்படி இருந்தது?

வருதல்

பாலேறும் விடையில்வரும் திரிகூடப் பெருமானார் பவனி காணக்
காலேறும் காமனுக்காக் கையேறும் படைப்ப வுஞ்சாய்க் கன்னி மார்கள்
சேலேறுங் கலகவிழிக் கணைதீட்டிப் புருவநெடுஞ் சிலைகள் கோட்டி
மாலேறப் பொருதும்என்று மணிச்சிலம்பு முரசறைய வருகின் றாரே. 1

பால்நிறக் காளை மேல் பவனி வரும் திரிகூடப் பெருமானாரைக் காண, காமனுக்குக் கையாள்களாகப் படைக்கப்பட்ட கன்னிமார் மீன்-விழி அம்புகளைத் தீட்டிக்கொண்டு, புருவ வில்லை வளைத்துக்கொண்டு மயக்கம் தந்துப் போரிடுவோம் என்று காலில் அணிந்த சிலம்பு முரசு முழங்க வந்தனர். 

பால் (பால்நிறம்) ஏறும் விடையில் வரும் திரிகூடப் பெருமானார் பவனி காணக், கால் ஏறும் (காற்றில் வரும்) காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் (மன்மதனுக்காக அவன் கையில் ஏறியிலுக்கும் மலர் அம்புகளைகக்) கன்னிமார்கள் சேல் (மீன்) ஏறும் கலக விழிக் கணை தீட்டிப் புருவ நெடும் சிலைகள் கோட்டி (வில்லை வளைத்து) மால் (மயக்கம்) ஏறப் பொருதும் என்று மணிச் சிலம்பு முரசு அறைய வருகின்றாரே. 1

பேசிக்கொள்ளுதல்

ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும் 
ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்   
புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில் 
பொங்கரவம் ஏதுதனிச் சங்கே தென்பார்       2

சிவன் ஒரே ஒரு மானைப் பிடித்துத் தன் கையில் வைத்திருக்கிறான். நாங்களும் வருகிறோமே என்று பல மான்கள் வருவது போல் கோடிக்கணக்கில் மகளிர் அங்கு வந்தனர். 

ஒரு மானைப் பிடித்து வந்த பெருமானைத் தொடர்ந்து வரும் ஒரு கோடி மான்கள் போல் வரு கோடி மடவார் புரிநூலின் மார்பன் இவன் அயன் என்பார் அயன் ஆகில் பொங்கு அரவம் ஏது தனிச் சங்கு ஏது என்பார் (இவன் பிரமன் என்றால் கையில் பாம்பைச் சங்கு-வளையலாக அணிந்திருப்பது ஏன் என்றனர்)        2

விரிகருணை மாலென்பார் மாலாகின் விழியின்மேல்
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்         
இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகையால்
ஈசனிவன் திரிகூட ராசனே என்பார்     3

வருபவன் திருமால் என்று சிலர் கூறினர். திருமால் என்றால் அவனுக்கு 3 கண் ஏது என்றனர் சிலர். திருமாலும் பிரமனும் உடன் வருகின்றனரே! ஆதலால் வருபவன் சிவன்தான் என்று சிலர் கூறினர். 

விரி கருணை மால் (திருமால்) என்பார் மால் ஆகின் விழியின் மேல் விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகையால் ஈசன் இவன் திரிகூட ராசனே என்பார் 3
 
ரவிக்கை
ஒருகைவளை பூண்ட பெண்கள் ஒருகைவளை பூணமறந்து
ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார் 4

ஒரு கையில் வளையல் அணிந்துகொண்டு மற்றொரு கையில் பூண மறந்து சிலர் ஓடிவந்தனர். அதனைக் கண்டு நகைப்பவரைப் பார்த்து அவர்கள் நாணி நின்றனர். காணும் பதட்டத்தில் முலைமேல் போடும் ரவிக்கையைச் சிலர் இடையில் கட்டிக்கொண்டனர். பின்னர் எண்ணிப் பார்த்துச் சரி செய்துகொண்டனர். 

ஒரு கை வளை பூண்ட பெண்கள் ஒரு கை வளை பூண மறந்து ஓடுவார். நகைப்பவரை நாடுவார் கவிழ்வார். இரு தனத்து (இரு முலை) ரவிக்கை தனை அரையில் (இடுப்பில்) உடை தொடுவார் பின் இந்த உடை ரவிக்கை எனச் சந்த (அழகிய) முலைக்கு இடுவார் 4

கருதுமனம் புறம்போக ஒருகண்ணில் மையெடுத்த
கையுமாய் ஒருகணிட்ட மையுமாய் வருவார்
நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம்
நில்லானோ மதனை இன்னம் வெல்லானோ என்பார் 5

சிலர் ஒரு கண்ணுக்கு மை தீட்டியவுடன் மற்றொரு கண்ணுக்குத் தீட்டவேண்டிய மையைக் கையில் வைத்துக்கொண்டு ஓடிவந்தனர். இவன் தெருவில் நெடுநேரம் நிற்கமாட்டானா, காமனை மீண்டும் எரிக்கமாட்டானா என்று ஏங்கினர். 

(அவனைக்) கருதும் மனம் புறம் போக ஒரு கண்ணில் மை யெடுத்த கையுமாய் ஒரு கண் இட்ட மையுமாய் வருவார். நிருபன் இவன் நல் நகரத் தெருவிலே நெடு நேரம் நில்லானோ மதனை இன்னம் வெல்லானோ என்பார் 5

மெய்வளையும் மறுவுடைய தெய்வநா யகன்முடித்த
வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோல் என்பார்     
பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப்
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் 6

பெண் மனம் வளைவது போல இவன் தலையில் உள்ள பிறை நிலாவும் வளைகிறதே! 

மெய் வளையும் மறு உடைய தெய்வ நாயகன் முடித்த வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார். பை வளைத்துக் கிடக்கும் இவன் மெய் வளையும் பாம்புகட்குப் பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் 6

இவ்வளைக்கை தோளழுந்த இவன்மார்பில் அழுந்தாமல்
என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை என்பார்
மைவளையும் குழல்சோரக் கைவளைகொண் டானிதென்ன
மாயமோ சடைதரித்த ஞாயமோ என்பார் 7

என் வளையலை இவன் தோளில் அழுத்தாத என் கை என்ன கை? இவன் மார்பில் அழுந்தாத என் முலை என்ன முலை? என் கூந்தல் விரிந்து கிடக்கவும், கையிலுள்ள வளையல்கள் கழலவும் செய்கிறானே, இது என்ன ஞாயம் என்று சிலர் கூறினர். 

இவ் வளைக்கை (இவன்) தோள் அழுந்த இவன் மார்பில் அழுந்தாமல் என்ன முலை நமக்கு எழுந்த வன்ன முலை என்பார். மை வளையும் குழல் சோரக் கைவளை கொண்டான் இது என்ன மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார் 7



திருக்குற்றாலக் குறவஞ்சி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் இசைப்பாடல்களுடன் பாடிய நாடகத் தமிழ் நூல். இதன் காலம் 17 ஆம் நூற்றாண்டு. 

No comments:

Post a Comment