Pages

Friday, 10 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 112

பாவுரை
112 நலம் புனைந்து உரைத்தல்
அவள் முகம்
மதியோ

மதியே அவள் அவள் முகத்துக்கு நீ ஒப்பாவாயா

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா விளக்கம்
·         அம்போதரங்கம் என்னும் உறுப்பினைப் பெற்றிருக்கும் கலிப்பா - அம்பு = நீர், தரங்கம் = அலை
·         அம்பு + தரங்கம் = அம்போதரங்கம், - வடமொழிப் புணர்ச்சி. நீரலையானது தோன்றிய இடத்திலிருந்து உயரம் குறைந்துகொண்டே செல்வது போல் அடியின் நீளமானது குறைந்துகொண்டே செல்லும் பாடற்பகுதி. மேலும் அலையின் நீளமானது போகப் போக கூடிக் கொண்டே செல்வது போல அடியின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்லும் பாடற்பகுதி.
·         இவற்றை முறையே பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் என்று பெயரிட்டு வழங்குவர்.
·         பேரெண் – 4 சீர்கொண்ட ஈரடிப் பாடல் 2 அமைவது. அல்லது குறட்பாக்கள் 2 அமைவது.
·         சிற்றெண் – 4 சீர்கொண்ட ஓரடிப்பாடல் 4 அமைவது இடையெண் – 2 சீர்கொண்ட அடிகள் 8 அமைவது.
·         அளவெண் – ஈரசை அல்லது மூவசைகொண்ட சீர் ஒன்றும் அசைச்சீர் ஒன்றும் சேர்ந்து ஓரடியாகி 16 அடிகளைக் கொண்டு அமைவத்
·         2, 4, 8, 16 எண்ணிக்கை வரையறை அன்று. இயல்பான விரிவு. எண் உறுப்பு குறைவதும் உண்டு.
·         அம் + போது + அரங்கம் – தமிழ் நெறிப் புணர்ச்சி = அழகிய பூவரங்கம்

தரவு
மலர்மணத்தை முகர்ந்தாலே வாடிவிடும் தன்மையதாய்
நிலைதளரும் நீர்மையுடை அனிச்சமெனும் மென்மலரே
என்னவளோ யான்கசக்க இனிதாக மலர்கின்றாள்
பின்பிரிய வாடுகிறாள் பெண்சீர்மை பெரிதன்றோ 1111
தாழிசை
மலர்கண்டால் இவள்கண்ணாய் மயங்குகிற என்நெஞ்சே
பலர்கண்டால் பார்த்திடுமோ பாவையிவள் கண்நெஞ்சே 1112 
பார்வை     1
மாந்தளிரின் மெல்லியதாம் மற்றிவள்தன் பொன்மேனி
காந்தாமல் முதிராமல் கனியாகும் நன்மேனி 1113 – 1    
தொடு புலன்    2
மெல்லீரம் உள்ளிருக்கும் வெண்முத்தே இவள்வாயில்
நல்லீர அமிழ்தூறும் நகைமுத்திற் கிணைநீயோ 1113 – 2
சுவை     3
அம்போதரங்கம்
பேரெண்
நஞ்சும் அமிழ்தாம் நறுமணம் உடலில்
கொஞ்சும் வெறியைக் கூட்டிக் குலவும் 1113 – 3
முகர்வு    1
கருத்த கருவிழி கலவியால் செந்நிறம்
பொருதவேல் உண்கண் பொருவும் நிறமால் 1113 – 4
பார்வை    2
சிற்றெண்
மூங்கிலைப் போல மொசியும் தோள்கள் 1113 – 5   1
குவளை கவிழக் குலவும் கண்கள் 1114  2
அனிச்சச் சுமையால் ஆடும் மெல்லிடை 1115       3
மதியா முகமா மயங்கும் விண்மீன்  1116    4
இடையெண்
குறையாத மதியம் நீ 1
கூடும் கலைமுகம் நீ 2
நிறைந்த முழுமுகம் நீ 3
நெஞ்சில் நெளிமுகம் நீ 4
மறையாத வாள்முகம் நீ 5
மாதர் வளர்முகம் நீ 6
சிறைவை திருமுகம் நீ 7
தேடாத் தெளிமுகம் நீ (1117)  8
அளவெண்
மாதரும் நீ 1
மதியமும் நீ 2
காதலும் நீ 3
கலையும் நீ 4
ஒளியும் நீ 5
உவப்பும் நீ 6
வல்லையும் நீ 7
வனப்பும் நீ 8
முகமும் நீ 9
அகமும் நீ 10
விடலும் நீ 11
தொடலும் நீ 12
வாழியும் நீ 13
மேழியும் நீ 14
போன்மையும் நீ 15
பூவும் நீ 1118  16
தனிச்சொல்

என்றெல்லாம்
சுரிதகம்
சொல்லி மகிழ்ந்தான் சுடர்மதியம் தோற்றதென்றான் 1119
மெல்லன்னத் தூவி அனிச்சம் நெருஞ்சியென்றான்
நல்லடியை நாடுகின்ற நாள் 1120

திருக்குறள் பாவுரை - அடியேன் செங்கைப் பொதுவன் இயற்றியது 2006
திருக்குறள் மூலம் | சொல் பிரிப்புப் பதிவு | இரண்டு அடிகள் ஒரே வரியில்
112 நலம் புனைந்து உரைத்தல்

1.       நல்நீரை! வாழி!-அனிச்சமே! நின்னினும் \ மெல் நீரள், யாம் வீழ்பவள்.          1111.    
2.       மலர் காணின் மையாத்தி நெஞ்சே! 'இவள் கண் \ பலர் காணும் பூ ஒக்கும்!' என்று.                1112.    
3.       முறி, மேனி, முத்தம், முறுவல்; வெறி, நாற்றம்; \ வேல், உண்கண்;-வேய்த்தோளவட்கு.                1113.    
4.       காணின், குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்  \ மாணிழை கண் ஒவ்வேம்!’ என்று.                1114.    
5.       அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு \ நல்ல படாஅ, பறை. 1115.   
6.       மதியும் மடந்தை முகனும் அறியா, \ பதியின் கலங்கிய, மீன்.  1116.   
7.       அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல \ மறு உண்டோ, மாதர் முகத்து!.             1117.    
8.       மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல், \ காதலை-வாழி, மதி!.   1118.   
9.       மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்திஆயின், \ பலர் காணத் தோன்றல்!-மதி!.           1119.    
10.   அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர் \ அடிக்கு நெருஞ்சிப் பழம்.           1120.   

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்


No comments:

Post a Comment