சொல்லிலும் பொருளிலும் சுவை தோன்றும்படிப் பாடுவது செய்யுளின்பம்
எதுகை மோனைகளால் சொல்லில் இன்பம் தோன்றும்
முன்னைச் சிற்றில் முழங்கு கடல் ஓதம் மூழ்கிப் போக
அன்னைக்கு உரைப்பன் அறிவாய் கடலே என்று அலறிப் பேரும்
தன்மை மடவார் தளர்ந்து உகுத்த வெண்முத்தம் தயங்கு கானல்
புன்னை அரும்பு ஏய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே எம் ஊர். (சிலப்பதிகாரம்)
- அவள் கடல் மணலில் சிற்றில் இழைத்து விளையாடியபோது கடல் அலை வந்து அழித்துகிட்டுப் போக, "இரு உன்னை என் அம்மாவிடம் சொல்லி என்ன செய்கிறேன் பார்" என்று சொல்லிக்கொண்டு அவள் கண்ணீர் முத்துகளைச் சிந்தினாள்.
- இது சொல்லும் பொருளில் காணப்படும் சுவையின்பம்
இது பொருள் சுருக்கம் அமைந்த பாடல் (வைதருப்ப நெறி)
துனை வரு நீர் துடைப்பவராய்த் துவள்கின்றேன்
துணை விழி சேர் துயிலை நீக்கி
இன வளை போல் இன் நலம் சோர்ந்து இடர் உழப்ப
இறந்தவர் நாட்டு இல்லை போலும்
தனியவர்கள் தளர்வு எய்தத் தடம் கமலம்
தளை அவிழ்க்கும் தருணம் வேனில்
பனி மதுவின் பசுந்தாது பைம்பொழிலில்
பரப்பி வரும் பருவத் தென்றல்.
- பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு துவள்கிறேன்
- விழி தூங்க மறுக்கிறது
- வளையல்கள் சோர்கின்றன
- உடம்பே சரியில்லை
- வேனில் தென்றல் வீசுகிறது
- அதில் இன்பம் காண எனக்கு அவர் துணை இல்லையே
- அவள் ஏக்கம்
இது கருத்தை விரிவாகச் சொல்லும் பாடல் (கௌட நெறி)
மான் நேர் நோக்கின் வளைக்கை ஆய்ச்சியர்
கான முல்லை சூடார் கதுப்பில்
பூவைப் புதுமலர் சூடித் தாம் தம்
அடங்காப் பணை முலை இழை வளர் முற்றத்துச்
சுணங்கின் செவ்வி மறைப்பினும் மலர்ந்த
பூவைப் புது மலர் பரப்புவர் பூவயின்
ஆன் நிரை வருத்தம் வீட மலை எடுத்து
மாரி காத்த காளை
நீல மேனி நிகர்க்குமால் எனவே.
முல்லை நிலத்தில் வாழும் ஆய்ச்சி முல்லைப் பூவைச் சூடிக்கொள்ளவில்லை. காயா மலர்களைச் சூடிக்கொள்கிறாள். முலை முற்றத்திலும் கொட்டிக்கொள்கிறாள். காயாம்பூ கண்ணன் நிறம்போல் இருக்கிறது. அவள் விரும்பும் காளையும் கண்ணன் போல் இருக்கிறான். அதனால் காயா மலரைச் சூடிக்கொள்கிறாள்.
பூ சூடுவதில் கருத்தை வெளிப்படுத்தும் சுவையை இந்தப் பாடலில் காணமுடிகிறது.
தண்டியலங்காரம் PDF பக்கம் 44
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment