திருக் கண்ணப்பதேவர் திருமறம் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரதேவ நாயனார் பாடிய நூல்.
ஒப்புநோக்குக: கல்லாட தேவ நாயனார் பாடியது
இதில் 157 வரிகள் கொண்ட ஆசிரியப்பாவும், ஒரு வெண்பாவும் உள்ளன.
கண்ணப்பன் வரலாற்றைக் கூறும் இந்த நூல் 10 ஆம் நூற்றாண்டு. இவன் வரலாற்றைக் கூறும் மற்றொரு நூல் பெரிய புராணம். இது 12 ஆம் நூற்றாண்டு நூல். இதில் கூறப்பட்டுள்ள கண்ணப்பன் வரலாற்றை இங்கு ஒப்புநோக்குதல் நலம்.
தன் கண்ணைத் தோண்டி இறைவன் கண்ணுக்கு மருத்துவம் செய்தது கண்ணப்பன் செய்த மறச்செயல். இது அறியாதவன் செய்த மறம். இந்த மறச்செயலுக்குத் துணைநின்றது இறைமாட்டுக் கண்ணப்பனுக்கு இருந்த அன்பு. இறைவனுக்ககாகச் செய்த இந்த மறச்செயல் "திருமறம்".
இது அறியான் செய்த மறம். இந்த மறத்துக்கு இறைவன் மீதுள்ள அன்பே காரணமாக அமைந்தது.
இனி நூலின் பொருளை விளங்கிக்கொள்வோம்.
திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது
தேன்அழித்து ஊன்உண் கானவர் குலத்தே, திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது (5)
- கண்ணப்பன் செய்த தவத்தை அறிந்துகொள்ள இந்த உலகம் விருப்பம் கொண்டுள்ளது.
- தேன் அழித்து உண்ணும் கானவர் குலத்தில் கண்ணப்பன் பிறந்தான்.
- புலி குமுறும் காட்டிலே திரிந்தான்
- வேட்டைநாயுடன் காட்டில் திரிந்து வளர்ந்தான்.
வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது
குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை (10)
- வில், வேல், வாள் வித்தைகளை அவன் பயின்றான்
- புல்லால் வேயப்பட்டது அவன் வாழும் குடிசை
- அதன் முற்றத்தில் கறித்துண்டுகள் காயும்
- படைக்கருவிகளுக்கு மயில்பீலி சாத்தப்பட்டிருக்கும்.
வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்
இரவும் பகலும் இகழா முயற்றியொடு
மடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத் (15)
- இடுப்பில் புலித்தோல் கட்டியிருப்பான்
- வெள்ளை நிறத் தோலில் படுத்து உறங்குவான்
- கறிச்சோறும் தேனும் உண்பான்.
- வேட்டைநாய் அவன் முற்றத்தில் படுத்திருக்கும்
- சுற்றத்தாரும் அவனுடன் இருப்பர்.
தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவே
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு (20)
- உயிர்களைக் கொன்று உண்பதே அவன் தொழில்
- புலி கடித்து ஆறிய தழும்பு அவன் கையில் இருக்கும்
- போர்பயிற்சியின்போது படைக்கருவ்விகள் கிழித்த காயம் ஆறிய தழும்புகள் மார்பில் இருக்கும்
- நெற்றியில் கரடி கௌவிய காய வடு இருக்கும்
- கால் தொடையில் காட்டுப்பன்றி தாக்கிய காயம் ஆறியிருக்கும்
செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்து
அடுபடை பிரியாக் கொடுவிற லதுவே,மனமே
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்கு அகனமர்ந் ததுவே, இதுஅக் (25)
- அவன் தலைமுடி செடிகள் முளைத்திருப்பது போல் இருக்கும்.
- அவனது கண் சிவந்து கூர்மையான பார்வை கொண்டதாக இருக்கும்.
- மேனி கருமை நிறம்
- எப்போதும் படைக்கலன்கள் அவன் உடம்பில் தொங்கும்
- விறல் மிக உடம்பு
- மனம் வேட்டையாடுவதை நினைத்துக்கொண்டிருக்கும்
- வேட்டையில் உயிரினம் படும் துயரைப்பற்றி அவன் கவலைப்பட மாட்டான்.
கானத் தலைவன் தன்மை, கண்ணுதல்
வானத் தலைவன் மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது (30)
- அவன் அந்தக் காட்டின் தலைவன்.
- வானவர் போற்றும் அம்மையப்பனைக் கண்டு வழிபட்ட பின்னரே உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தான்.
வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று
கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி (35)
- காலில் பொடி சுடும் உச்சி வேளையில்
- முள் குத்தும் பாதையில் நடந்து வேட்டையாடுவான்
எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு (40)
- தூங்கும் மிருகங்களை நாய்கள் எழுப்பும்
- அம்பு எய்து அதனை இவன் வேட்டையாடுவான்.
- அதன் கறிகளை வெட்டி எடுப்பான்.
- தீக்கடைக்கோலால் நெருப்பு உண்டாக்கிச் சுடுவான்.
- சுட்டதைச் சுவைத்துப் பார்ப்பான்
- நல்லனவற்றை எடுத்துக்கொள்வான்.
அண்ணற்கு அமிர்தென்று அதுவேறு அமைத்துத்
தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக் (45)
- அண்ணல் சிவனுக்குப் படைக்கும் அமிர்தம் என்று அதனை வைத்துக்கொள்வான்.
- அண்ணலை நீராட்ட வாய்க்குடத்தில் தண்ணீர் கொண்டு செல்வான்..
- அண்ணலுக்குப் பூ போட, பூக்களைப் பறித்துத் தன் தலையில் சூடிக்கொள்வான்.
- தோளில் வில்லம்புகளை மாட்டிக்கொள்வான்.
கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி எய்திய சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்
துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி (50)
- நாய் அவனைப் பின்தொடர்ந்து வரும்.
- பலரும் வெறுக்கும்படி காளத்தி சிவனிடம் வந்தான்
நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்து
அருச்சனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி (55)
- அவனுக்கு முன்னரே மறையோன் காளத்தி நாதருக்குப் பூசை செய்திருந்தான்.
- நீராட்டி ஆடை உடுத்தி வைத்திருந்தான்
- மாலை போட்டுப் பூ இட்டுப் பூசை செய்திருந்தான்.
- திரை கட்டியிருந்தான்
மந்திரம் எண்ணி வலமிடம் வந்து
விடைகொண் டேகின பின்தொழில்
பூசனை தன்னைப் புக்கொரு காலில்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத் (60)
- மறையவன் மந்திரம் சொன்னான்
- வலமாகவும் இடமாகவும் சுற்றிவந்தான்
- மறையவன் போன பின்பு கண்ணப்பன் வந்தான்.
- காலில் அணிந்திருக்கும் செருப்பால் மறையவன் செய்திருந்த ஒப்பனைகளை நீக்கினான்.
- வாயில் அடக்கி வைத்திருந்த நீரை சிவன் மேனியில் உமிழ்ந்து நீராட்டினான்.
தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா (65)
- தன் தலையில் வைத்திருந்த பூவை எடுத்துச் சிவனுக்குப் போட்டான்
- உண்ணும்படி இறைச்சியை இறைவனுக்குப் படைத்தான்.
- இறைவனைத் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தான்.
- இறைவன் மேல் காதல் பெருக்கெடுத்து ஓடிற்று
- உள்ளம் கசிந்தது
- உடல் கூத்தாடியது
- அன்போடு வணங்கினான்.
அன்பொடு கானகம் அடையும் அடைந்த
அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும்
உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர் (70)
- அன்பில் மிதந்தவனாகக் காட்டுக்குச் சென்றான்.
- பொழுது விடிந்தது.
- நீராடிய பின் அந்தணன் வந்தான்.
- தான் படைத்த பொருள்கள் இல்லை
பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும்
இவ்வாறு அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
கரந்திருந் தவண்அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று (75)
- தலையில் வைத்த பூக்கள் சூட்டப்பட்டிருந்தன
- நடுக்குற்றான்.
- இவ்வாறு பூசை செய்தவன் யார் என்று அறிய எண்ணினான்
- தெரிந்துகொள்ள எண்ணி மறைந்திருந்தான்.
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளும்அவ் வழிப்பட்டு இறைவ
உற்றது கேட்டருள் உன்தனக்கு அழகா
நாடொறும் நான்செய் பூசனை தன்னை (80)
- வேடன் கண்ணப்பன் வந்தான்
- முந்திய நாளில் செய்தது போலவே பூசை செய்தான்
- இறைச்சியைப் படைத்தான்
- போய்விட்டான்
- அந்தணன் இறைவனிடம் முறையிட்டான்
- நாள்தோறும் நான் செய்த பூசையை
ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை (85)
- ஒரு வேட்டுவன் வந்து அழிக்கிறான்.
- நாயாடு உன்னிடம் வருகிறான்
- செருப்புக் காலால் நான் செய்த பூசைகளை அகற்றுகிறான்
- வாயில் கொண்டுவந்த நீரை உன்மேல் உமிழ்ந்து நீராட்டுகிறான்
- தன் தலையில் சூட்டிக்கொண்டு வந்த பூக்களை உனக்குச் சூட்டுகிறான்
- சருகு இலையில் இறைச்சியை உனக்குப் படைக்கிறான்.
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக் கினிதே எனைஉருக்
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறுங் குணத்தன் அல்லன் என்நும்
திருக்குறிப்பு என்றவன் சென்ற அல்லிடைக் (90)
- அவன் உனக்குத் தருவது உனக்கு இனிதா?
- நான் உனக்குத் தருவது உனக்கு எப்படி இருக்கிறது?
- நான் இங்கு மறைந்திருப்பதைக் காணில் கொன்றுவிடுவான்.
- அவன் எல்லாராலும் வெறுக்கத் தக்க குணம் உள்ளவனாகத் தெரியவில்லை.
- சிவனே
- உன் கருத்து என்ன? - அந்தணர் சிவனை உள்ளத்தால் வினவினார்.
கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக (95)
- அந்தணர் கனவில் காளத்தியப்பன் தோன்றினார்.
- நெற்றியில் பிறை
- பின்னலிட்ட மயிர் இருக்கும் சடை
- கறையணி மிடறு
- கனலும் மழுவும் கொண்ட கைகள்
- நெற்றிக்கண் - ஆகியவற்றுடன் தோன்றினார்.
ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப் புரிவொடு
பூசனை செய்யும் குனிசிலை வேடன்
குணமவை ஆவன
உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர் (100)
- உமையவளோடு விடைமேல் தோன்றினார்.
- அந்தணனுக்கு அருள் புரிந்து கூறினார்.
- விருப்பத்தோடு எனக்குப் பூசனை செய்யும் வில் வேடன் குணம் சிறந்தது
- என்மேல் அவனுக்கு உள்ள உரிமையால் செய்கிறான்.
- அவன் ஒரு மாதவன் என உணர்ந்துகொள்.
அவனுகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே, அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழிலவன் வாயது தூய பொற்குடமே
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே (105)
- அவன் வேட்டையாடும் வனம் எனக்கு முனிவர் வாழும் வனம்
- அவன் செருப்பின் அடி எனக்கு ஈரம் துவட்டும் துண்டு
- அவன் வாய்நீர் எனக்குப் பொற்குட நீர்
- அவன் எச்சில் நீர் எனக்குக் கங்கை நீர்
- அவன் பல் பொற்குடத்தில் பதித்த மணிகள்
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே, அவன்தலை
தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தலரே அவனுகந்து (110)
- அவன் சூடிய மலர் எனக்குப் புத்தம்புதிய மலர்
- அவன் நாவில் ஊறிய நீரை உமிழும்போது அவன் மீசையில் பட்டு விழ்வது எனக்குத் குசைப் புல்லால் தெளிக்கும் நீர்
- அவன் தலையில் சூடிய மலர் தருப்பைப் புல்லில் வைத்திருந்த கற்பக மலர்.
இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுவெனக்கு உனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று (115)
- அவன் படைத்த இறைச்சி மாதவர் எனக்குப் படைத்த நெய்ப்பாலில் சமைத்து அளிக்கும் சோறு.
- எனக்கு அவை இப்படி
- இதனை நாளைக்கு உனக்கு அவன் அன்பைக் காட்டுவேன்
- நீ படையல் செய்த பின் மறைந்திரு
இறையவன் எழுந்த ருளினன்
அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து (120)
- இப்படிச் சொல்லிவிட்டு இறைவன் மறைந்தான்.
- மறையவனுக்குக் கூச்சம் (நாணம்)
- வைகறையில் குளித்துவிட்டு வழக்கம்போல் பூசை செய்தான்.
தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும்
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையில் காதலித் தடித்த
உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் (125)
- மறைந்திருந்தான்
- பொழுது உச்சிக்கு வந்தது
- கண்ணப்பன் வேட்டையாடினான்.
- உடும்புக் கறியுடன் வந்தான்
- செருப்பு அணிந்திருந்தான்
- நாயுடன் வந்தான்
செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன் திருமேனியின்
மூன்று கண்ணாய் ஆங்கிரு கண்ணிலும்
உதிரம் ஒழியா தொழுக இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று
வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக் (130)
- காளத்தியப்பன் 3 கண்கள் இரண்டில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது
- பார்த்த கண்ணப்பன் பதைத்தான்
- மனம் மயங்கினான்
- வாயிலிருந்த புனலால் ரத்தத்தைக் கழுவினான்.
- ரத்தம் நிற்கவில்லை
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர்
அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு
இன்மை கண்டு நன்மையில் (135)
- கையில் கறியை வைத்துக்கொண்டு நிலத்தில் விழுந்து புரண்டான்.
- நீண்ட நேரம் புரண்டான்
- நிலத்தில் விழுந்துகிடந்த வில்லையும் அம்பையும் கையில் எடுத்துக்கொண்டான்.
- இறைவனுக்கு இந்தக் கொடுமை செய்தவர் யார் எனத் தேடினான்.
- யாரும் கிடைக்கவில்லை.
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்று
அன்பொடுங் கனற்றி
இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன் (140)
- தக்க மருந்து இலைகளைக் கொண்டுவந்து கண்ணில் பிழிந்தான்.
- ரத்தம் நிற்கவில்லை
- நிலை தளர்ந்தான்
- அத்தனுக்கு நேர்ந்தது என்ன -- என்று அங்கலாய்த்தான்.
- தரித்துப் பொறுமையாக இருக்க அவனால் முடியவில்லை.
- அன்பு மேலிட்டது
- கனன்றான்
- ஒரு முடிவுக்கு வந்தான்.
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி
நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து (145)
- தன் கண்ணை எடுத்துக் கடவுள் கண்ணில் வைத்துப் பார்க்கலாம் என்று நினைத்தான்.
- அம்பால் தன் கண் ஒன்றைத் தோண்டி எடுத்து இறைவன் கண்ணில் வைத்தான்.
- இறைவன் கண்ணில் கசிந்த ரத்தம் நின்றுவிட்டது.
- அதனைக் கண்டதும் மனம் மகிழ்ந்தான்.
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லு கண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்று
இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்
தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் (150)
- உடனே மற்றொரு கண்ணையும் தோண்ட அம்பினைக் கண்ணிடம் கொண்டு செல்லும்போது இறைவன் "நில்லு கண்ணப்ப" என்று கூறினார்.
- லிங்கத்தில் தோன்றிய தன் கையால் கண்ணப்பன் கையைத் தடுத்து நிறுத்தினார்.
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்து
அருளினன் அருளலும் விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்
துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும் (155)
ஏத்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே. (157) 1
- அப்போது வானவர் மலர்மழை பொழிந்தனர். சங்கு, பாடகம், துந்துபி இசைக் கருவிகளை முழக்கினர்.
- முனிவர்கள் கண்ணப்பனைப் பாராட்டினர்.
- கண்ணப்பன் சிவகதி பெற்றான்.
வெண்பா
தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண். 2
- கண்ணப்பன் தாய் தத்தை
- தந்தை நாகன்
- பிறந்த ஊர் பொத்தம்பி நாட்டு உடுப்பி
- வேட்டுவர் குலம்
- பெயர் திண்ணப்பன்
- செய்த தவச் செயலால் கண்ணப்பன் என்று போற்றப்படுகிறான்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 10 ஆம் நூற்றாண்டு. பக்கம் 249
.jpg)
No comments:
Post a Comment