Pages

Saturday, 11 October 2014

புறநானூறு 37 Purananuru 37

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


பறவையின் துன்பம் தீர்த்த செம்பியனின் (சிபிச் சக்கரவர்த்தி
வழித்தோன்றலே!

வேந்தன் தன் யானையொடு உள்ளே இருப்பதால் 
செம்பு போன்ற கோட்டையைச் சிதைத்தல் நல்லதன்று 
என உணர்ந்திருந்தும் 
போரிட்டுச் சிதைக்கும் வல்லமை பெற்றவன் நீ.

நச்சுப் பற்களை உடைய ஐந்தலை நாகம் புகுந்தது போலவும்,
மின்னலுடன் கூடிய இடி மலையைப் பிளந்தது போலவும்,
தாக்கி அந்தக் கோட்டையைத் தகர்த்தாய்.

நள்ளிரவில் காவல் புரிவோர் 
விளக்கின் நிழல் நீரில் விழ 
அதனை அகழியிலுள்ள முதலை 
(இரை என்று எண்ணிக்) கவ்வும் அகழி கொண்டது அந்தக் கோட்டை.

பாடல்

நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த,
வேக வெந் திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு,
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,        5
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,              10
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.
  • திணை வாகை
  • துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 
  • மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

புறாவையும்
அதனை
இரையாக்கிக் கொள்ள வந்த
கழுகையும்
காப்பாற்றுவதற்காகப்
புறாவின் எடைக்கு எடை
தன் தொடையிலிருந்து தசையைக்
கழுகுக்கு இரையாகத்
தராசில் நிறுத்து வைத்தபோது
போதிய எடை வராமையால்
தன்னையே தராசில் அமர்த்திக்
கழுகுக்கு தந்த வள்ளல் அரசன் (சிபி)
வழிவந்தவன்
இந்தக் கிள்ளிவளவன் 


    2 comments:

    1. 'நல்லதல்ல என்று உணர்ந்திருந்தும் போரிட்டுச் சிதைக்கும் வல்லமை பெற்றவன் நீ' என மன்னனைப் பற்றிக் ;கூறியிருப்பது அவனுக்கு சிறப்பாகுமா?

      ReplyDelete
      Replies
      1. அவன் செயல் வேறு
        அறிவுரை வேறு

        Delete