Pages

Friday, 5 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 38

33

ராமரஷி வனம் - 3

தம்பிரைத் தாராமூக்கன் பாம்பு விழுங்கியது அறிந்து தருமர் உணர்விழந்து அழுது புலம்புகிறார். 

வெற்றி மதயானை வீமா மதகரியே
ஏழு பிராயத்தில் இடும்பனைக் கொன்றாயே 
பத்துப் பிராயத்தில் பகாசூரனைக் கொன்றாயே 

அரக்கு மாளிகையில் ஐவரையும் காத்தாயே 

ஏழுபது லட்சம் யானை இழுக்க ஒண்ணாக் கதை எடுத்து அமர் செய்கின்ற ஆண்மையுள்ள வீமா மலைப்பாம்பைக் கொல்ல மறந்தாயோ

கல்லான தூணைக் கறையான் அரிக்குமோ 
இரும்பான தூண் இற்று விழுமோ

ஆச்சா  பருவதமே! உனக்கு அழிவில்லை என்று இருந்தேன் 
கற்பகத் தூணுக்குக் கலக்கம் இல்லை என்று இருந்தேன் 
கற்பகத் தூணும் கரைகின்ற நாள் ஆச்சே

என்னை அலையவிட்டு இப்பாம்புக்கு இரையானாய் 

நூறுபேர் மன்னர்களைக் கொல்லுவேன் என்று சொன்ன கொடிய சபதம் எல்லாம் மறந்தாயோ தம்பி நீ 

என்னை மறந்து இறந்துவிட ஞாயமுண்டோ 

என்றல்லாம் சொல்லிப் புலம்பினார். 

மார்பிலும் தோளிலும் அடித்துக்கொண்டார் 
மண்மேல் களைத்து விழுந்தார் 
பாஞ்சாலி காட்டுத் தழையை எடுத்து விசிறினாள். 
களை(ப்பு) தெளிந்தார். 

அருச்சுனனை எண்ணிப் புலம்பல் 

அப்பாடா அப்பாடா ஆணழகா தம்பியரே
காளை அருச்சுனா
எடுக்காத வில் எடுத்து இளங்கிளியை மாலையிட்டாய் 

நீர் பார்த்து மீன் எய்தாய் 

அழகில் மிகுந்தவரே 
என்னை மறந்தீரோ 

உன்னை மடிய விட்டு ஒரு நாழி வாழ்வேனோ 
கூட மடிந்திடுவேன் கொற்றவனே உன்னுடனே 
நானும் மடிந்திடுவேன் ராஜர்களே உங்களுடன்

அங்கம் உருகுது ஐயா ஆவி தனல் ஆகுது ஐயா
நெஞ்சம் தனிலே நெருப்பாய்  எரியுது இப்போ

ஈரலுக்குள்ளே இருந்து தணல் பற்றுதடா
கும்பிக்குள்ளே குலவிளக்கா ஏரியுதடா

மனது தரிக்கவில்லை வயிற்றரிச்சல் தீரவில்லை 

உங்களைப் பறிகொடுத்து உலகத்தில் இருப்பேனோ 
நானும் மடிந்திருவேன் ராஜர்களே உங்களுடன் 

உங்களைப் பொசித்த பாம்பு என்னைப் பொசியாதோ

என்று புலம்பிக்கொண்டு எழுந்தார் 

பாம்பின் வாயில் தன் தலையைக் கொடுத்தார் 
தாராமூக்கன் பாம்பு அவரை நாக்கால் வெளியே தள்ளிவிட்டது

நான் என்ன பாவம் செய்தேன் 
ஏன் என்னை விழுங்க மறுக்கிறாய் - என்றார்

தோரா வடிவழகி துரோபதையும் கூறுவாள் 

ஆண்டவரே 
ஐயாவே
அழகுள்ள தருமரே
மாயவரைத் தானும் இப்போ மனதில் நினையும் என்றாள் 

அவ்வார்த்தை கேட்டு, தருமர் மாயனை நினத்துப் புலம்புகிறார்

மாயன் பெருமாளே  வந்தருள வேணுமையா 
ஆலிலை மேல் பள்ளி கொண்ட ஆதிமூலம் வாரும் ஐயா 

பாற்கடலில் பள்ளி கொண்ட பாரளந்தார் வாரும் ஐயா 

மச்ச வடிவு கொண்ட மாயவரே நின் சரணம் 
கூர்ம வடிவு கொண்ட கோபாலா நின் சரணம்

கல்லான அகலிகையை நல்ல பெண் ஆக்கி வைத்தீர் 
ஆதிமூலமே என்ற குஞ்சரத்தைக் காத்தவரே 

இராமனாய் நீ பிறந்து இராவணனைச் சங்கரித்தீர் 
அரக்கு மாளிகையில் ஐவரைக் காத்தீரே 
இத்தனை நாள் காத்தீர் இன்றல்லோ மாண்டுவிட்டோம் 

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் தப்பாது 

நான் அழுத கண்ணீர் உன்னை ரம்பம் கொண்டு அறுக்காதோ
வாரீரோ கிருஷ்ணா
என் மனத்துயரம் தீராயோ

அபயம் அபயம் - என்றார் 

தோரா வடிவழகி துரௌபதையும் சொல்லுவாள் 

அண்ணா
மணிவண்ணா 
அடியேனுக்கு உதவி செய்வாய்

மஞ்சள் இழந்தேன் 
மணம் இழந்தேன் 
பூ இழந்தேன் 

தாலிச் சரடு இழந்தேன் 

ஐவர் இட்ட மாங்கல்யம் 
அழிவில்லை என்றிருந்தேன்
மாங்கலியம் மண்ணில் விழ நாளாச்சே 

ஆரைக் கழுத்தி அரைக்கழுத்தி ஆனேனே
கோரைக் கழுத்தி குரை கழுத்தி ஆனேனே
 
மாங்கலியப் பிச்சை நீ தாராயோ
என் குறை தீர்க்க மாட்டாயா  - என்று புலம்பினாள். 

ஆரைச் சதம் என்பேன் அன்னியரைத் தஞ்சம் என்பேன் 
எவரைச் சதம் என்பேன் இனி யாரைத் தஞ்சம் என்பேன் 
என்று உரைத்தாள் 

எம்பெருமாள் சொல்கிறார் 

எழுத்து விதி தன்னை எவரால் விலக்க வசம் 
தலையில் எழுதினதைத் தள்ளி வைக்கப் போறோமா

ஏட்டில் எழுதியதை எடுத்தெறியப்  போறோமா
அன்றழுதும் கர்த்தர் அழித்து எழுதப் போறாரோ

இட்டபடி ஒழிய எள் அளவும் குறையாது 
வரும் வினை வந்தால் மடியேந்த வேண்டாமா

எவராலே இவர்களை எழுப்ப முடியும் 
என்னாலே ஆகாது - என்றார் 

தர்மலிங்கம் சொல்கிறார் 

உன்னாலே ஆகாதது உலகத்தில் ஒன்று உண்டோ
எல்லாம் உமது செயல் 
தம்பிமார் பிழைக்க வழி பாரும் 
உன் புண்ணியமாய்ப் போகட்டும் - என்றார் 

மாயன் சுண்டெலி வடிவம் ஒன்றைத் தனியே எடுத்துக்கொண்டு பாம்பின் செவியில் நுழைந்தார் 

அருச்சுனன் வில் நாணை அறுத்தார் 
அவன் அம்பு பாய்ந்தது  
பாம்பு மறைந்து ராமரிஷி நின்றார் 
நால்வரும் வெளிப்பட்டனர் 

பாம்பு ராமசிஷி ஆன வரலாற்றை மாயன் மற்றவர்களுக்குக் கூறினார். 

இந்த வனத்தை விட்டு அடுத்த வனத்துக்குச் செல்லுங்கள் என்று மாயன் கூறினார். 

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)



No comments:

Post a Comment