Pages

Thursday, 4 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 33

22

ராமரிஷி வனம் -2 

ராமரிஷி பாம்பாக வாழ்ந்துவந்தார் 

இந்த வனத்தின் வடக்குப்பக்கம் போகவேண்டாம் என்று மாயன் பாண்டவர்களுக்குக் கூறியிருந்தார். (காரணம் - அங்கு அந்தப் பாம்பு இருந்தது)

வீமன் மீறிச் சென்றான்.

கடுகி வழிநடந்தான் கட்டழகன் வீமனவன்
சல்லடங்கள் போட்டுமல்லோ தட்டி வரிந்து கட்டி 
தட்டி வரிந்து கட்டித் தாமரைப் பூ சுங்கு விட்டு 
கையில் கெதை எடுத்துக் கடுகியே தான் நடந்நான் 
வடதிசை நோக்கி வாரான் மதகரியான் 

காயும் கனியும் அங்கே கடுகப் பழுத்திருக்கும் 
அவ்விடத்ததிலே கனிகள் அநேகம் பழுத்திருக்கும் 

அருநெல்லி
சிறுநெல்லி

அழகு தமார்த்தை
நொச்சித் தமார்த்தை

குடகுப் பலா
வண்ணப் பலா

மாங்கனி
தேமாங்கனி

அளவில்லாதவை அங்கு இருக்கக் கண்டான்
மகிழ்ந்தான்

உண்டு பிழைப்பார்கள் என்று எண்ணி மாயன் நமக்கு வஞ்சம் செய்தார் என்று எண்ணினான்

பறித்து உண்டான்
பிறருக்கு வேண்டும் என்று வேண்டிய அளவு பறித்துக்கொண்டிருந்தான்

மரக்கொம்பில் ஏறிப் பறிக்கையில் தாராமூக்கன் பாம்பு அவனைக் கண்டது
அவனை விழுங்கிவிட்டது

அதன் வயிற்றுக்குள் இருக்கிறோம் என்று தெரியாமல் வீமன் வெகுதூரம் நடந்தான்

எந்த இடம் என்று தெரியவில்லை
வழி ஏதும் தெரியவில்லை 
அதன் பெருங்குடலில் தங்கிங்கினான். 

அப்போது பாம்பின் வயிற்றுக்குள் இருக்கிறோம் என்று தெரியவந்தது
எண்ணாத எண்ணங்களை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்

அண்ணன் தம்பியரை
கூடப் பிறந்தவரை
ஒக்கப் பிறந்தவரை
உடன்பிறப்பை

விட்டுவிட்டு மாளும் விதி ஆயிற்றே
போகவேண்டாம் என்று மாயன் சொன்ன திசையில் வந்தேனே
என்ன செய்வேன்

ஆயரே கோவிந்தா ஆதிமூலம் வந்தருளும் 
மாயரே கோவிந்தா மகாதேவா காத்தருளும் 
என்று புலம்பிக்கொண்டிருந்தான் 

இங்கு 

அருச்சுனன் கனிகளைப் பறித்துக்கொண்டு தருமனிடம் வந்துவிட்டான்

அவனிடம் தருமர் சொன்னார்
வீமன் திரும்பவில்லை
வெகுநேரம் ஆயிற்று
தேடிச் சென்று அழைத்துவா - என்றார்

அருச்சுனன் வருகிறான் 

ஜல்லடங்கள் தான் போட்டுத் தட்டி வரிந்து கட்டி
தட்டி வரிந்து கட்டித் தாமரைப் பூ சொங்கு விட்டு 
பில்லைச் சமுதாடு பிகுவெடுத்த ஒட்டியாணம்
பட்டு தட்டிக் கட்டியல்லோ பாலாவும் தான் சொருகி 
அம்பு வில் தானெடுத்து அருச்சுனன் வாரானே 

காலடியைத் தேடி அந்த வழியில் வந்தான் 
அண்ணா வீமா - என்று கூவி அழைத்தான். 

அந்த ஒலியை வீமன் கேட்டான் 
தம்பி அருச்சுனா தூர நில் 
அருகில் வராதே 

ஏதோ பெரும்பாம்பு என்னை விழுங்கிற்று 
பாம்பின் வயிற்றில் அகப்பட்டுக் கொண்டேன்
இனி பிழைக்க மாட்டேன் 
மனவருத்தம் கொள்ளாதே 
நமது அண்ணர் தருமர் 

கவடு தெரியாதவர் 
கள்ளம் ஒன்றும் தான் அறியார் 
வெளுத்ததைப் பால் என்பார் 
வெள்ளமதை நீர் என்பார் 
பொய் சொல்லான் புண்ணியவான் 

அவருக்குத் தேறுதல் சொல் 
திரியோதரன் படையை வென்று  அண்ணனுக்குப் பட்டம் கட்டி அரசாண்டுகொண்டிரு. - என்றான்

அருச்சுனனுக்குக் கவலை பெரிதாயிற்று. 

அருச்சுனன் சொல்கிறான் 

நீ பாம்பின் வயிற்றில்   இறந்துவிட்டாய் என்பது கேட்டால் அண்ணன் அக்கணமே தன் உயிரை விட்டுவிடுவார். 

இதனை அவரிடம் எப்படிச் சொல்வேன் 
போகமாட்டேன் 
பாம்பின் வயிற்றைக் கிழிப்பேன் 
என்று சொல்லிக்கொண்டு வில்லில் அம்பைப் பூட்டினான். 

பாம்பு பார்த்துவிட்டது
அருச்சுனனையும் விழுங்கிங்கிவிட்டது. 

அண்ணா உன்னிடம் நானும் வந்துவிட்டேன் 
அண்ணர் தருமருக்கு ஆர் போய் உரைப்பார் - என்றான் 

எழுத்துப்படி அல்லோ இருவரும் ஒன்றானோம்
என்ன செய்வோம் என்று கலங்கினர். 

தருமர் பார்த்தார் 

அருச்சுனனும் திரும்பவில்லை 
நகுலா நீ போய் அழைத்து வா - என்றார்

நகுலன் சென்றான் 
தேடினான்
அவ்வாறே உரையாடினர் 
பாம்பு நகுலனையும் விழுங்கிற்று
அதன் வயிற்றில் இருவருடன் மூவர் ஆயினர் 

தருமர் சகாதேவனை அனுப்பினார்

தேடினான்
கூவினான்
கேட்டான்
மலைப்பாம்பு கண்டது
விழுங்கிற்று
நால்வர் ஆயினாம் என்றனர். 

நால்வரும் திரும்பவில்லை என்று தருமர் திரௌபதியிடம் சொல்லிக் கலங்கினார். 

அன்னமே
சொர்ணமே
அமிர்தப் பசுங்கிளியே
தேனே
மடமயிலே

தித்திக்கும் தெள்ளமுதே
கன்னல் மொழியாளே
கற்கண்டே
சர்க்கரையே

சாந்து கழுத்தியரே
சந்தனப்பூ மேனியரே
கோவைக் கழுத்தியரே 
குங்குமப்பூ மேனியரே

கொம்பேர் இடையாளே
நெருப்பில் பிறந்தவளே
நீலவண்ணன் தங்கையரே

கைமோசம் வந்ததுவே
என் கண்மணிகளைக் காணவில்லை 

செத்தாரோ பிழைத்தாரோ சேதி தெரியவில்லை 
மாண்டாரோ பிழைத்தாரோ மறுவார்த்தை நான் அறியேன்
 
கடுகி எழுந்திருங்காண்
கானகத்தில் தேடுவோம் - என்றார் தருமர்.

காலடிப் பதிவுகளைக் கண்டு அவ்வழியே தருமரும் திரௌபதியும் வந்தனர் 

தம்பியரின் பெயரைச் சொல்லி, தருமர் கூவி அழைத்தார். 

நால்வரும் பாம்பின் வயிற்றில் இருக்கிறோம்
பிரமன் இப்படி எழுதி வைத்திருக்கிறான்
இனி பிழைக்க மாட்டோம் - என்றர் 

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

நால்வரைப் பாம்பு விழுங்கிற்று


No comments:

Post a Comment