Pages

Saturday, 13 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 216


9
ரோம ரிஷி வனம் 

ஒன்பத்தாம் ஆண்டு

பாண்டவர்கள்  ரோம ரிசி வனத்தில் வாழ்ந்தனர் 
ரோம முனிவர் பாண்டவர் பன்னசாலைக்கு வந்தார் 

தருமர்

தருமர் ஆசனம் தந்து முனிவரை அமரச் செய்தார்
குருகுல வம்சத்தில் குந்தி மைந்தர் ஐந்து பேர் 
அவர்களில் தருமன் நான் 
வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வரும் என் தம்பியர் 

தரும்புரம் நாட்டை ஆண்டுவந்தோம் 
என் பெரிய தந்தை மகன் துரியோதனன் 
அவன் எங்களைச் சென்மப் பகையாளி எனக் கொண்டான் 

அதனால் அவன் எங்களைக் கொல்ல, பல சதிகள் செய்தான்
மாயன் புண்ணியத்தால் எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்தோம் 

முனிவர்

ஐவரில் ஒருவன் பரமசிவன் கையில் படைக்கருவி பெற்றால் மாற்றானை வென்று அரசு புரியலாம் என்றார் முனிவர்

மாயன் உதவி இல்லாமல் அதனைப் பெற இயலாது - என்றார் தருமர்

அப்படியானால் மாயனை அழையுங்கள் - என்றார் முனிவர் 

தருமர்

அடியளந்த மாயவரே ஆண்டவரே வாருமையா - என்று தருமர் வேண்டினார் 

மாயவர் வந்தார்
தருமர் அவரை மும்முறை வலம்வந்து வணங்கினார் 

பரமசிவனிடம் பாசுபதம் பெறுமாறு முனிவர் கூறுகிறார். நீர்தான் உதவவேண்டும் என்றார் தருமர் 

பாட்டன்

பாண்டவர் பாட்டன் வேத வியாசர். அவரையும் அழையுங்கள் என்றார் மாயன். 

வேத வியாசர் வந்தார். தருமர் வணங்கினார். 

பரமனிடம் பாசுபதம் பெற ஆரைப் போகச் சொல்லலாம் என்று பாட்டன் எண்ணினார் 

தருமரைப் போக விட்டால் அவருக்கு அரன் பாதம் தெரியாது 
வீமனால் பெற முடியாது 
நகுல சகாதேவரால் முடியாது 

அருச்சுனன் ஒருவனே அரனைக் காண வல்லவன் 
என்றார் பாட்டன் 

மாயன் அருச்சுனனை  அழைத்தார். 

கயிலாயம்  சென்று கர்த்தாவைக் கண்டு அதிக வரம் பெற்றுக்கொண்டு வா. வழியில் ஊர்வசி, மேனகை போன்றவர் அழகில் மயங்கிவிடாதே. பெண்களைத் தங்கை தமக்கை என்று சொல்லிவிட்டுப் போய்விடு  - என்றார் 

அருச்சுனன்
 
அப்படியே நடந்துகொண்டு அரனிடம் வரம் பெற்றுவருகிறேன் - என்றான் அருச்சுனன். 

வழியில் சிவனாலேயே எந்தச் சோதனை வந்தாலும் வெற்றி கொள். வரும்போது ஏலகன்னி என்னும் பெண்ணை மணந்துகொண்டு வா - என்றார் மாயன் 

அருச்சுனன் தன்னைச் சூலபாணி போல் ஒப்பனை செய்துகொண்டான். 

ஒற்றை வேட்டி
பிரம முடி 
உருத்திராட்ச மணி 

மணிமாலைகள்
நாகமணிக் கங்கணம் 
வேலாயுதம்
சூலாயுதம் 
புலித்தோல் ஆசனம் 
இடுப்பில் கிண்கிணி
மயில்தோகை
குருயோக புத்தகம் 
சுரை-ஓடு
கமண்டலம் 
கஞ்சாக் குடுக்கை 
சங்கு
கண்டிகை 
கணுக்கால் சிலம்பு 
கால்மிதி
முதலானவற்றைத் தரித்துக்கொண்டான் 

மாயனும், அவனது பாட்டனாரும் 
அருச்சுனனை வாழ்த்தி வழியனுப்பினர்

அருச்சுனன் விரைந்தான் 

மாயன் கன்னிப்பெண் உருவில் 
அருச்சுனனைச் சோதிக்க வந்தார். 

காயாம்பழம் போல் கறுப்பு மேனி
ஈச்சம் பழம் போல் இருள் கறுப்பு மேனி 
சொருகிய சவுரி முடி 
கொண்டைக்குக் குப்பி
கொலுசுக்கு முத்து 
காதில் கம்மல் ஜிமிக்கி 
கழுத்தில் கனக மணித் தாழ்வடம் 
நடுக்கழுத்தில் காரை 
ஒற்றைச் சரடு 
இரட்டைச் சரடு
முத்துச் சரப்பளி 
மோகன மாலை 
அணிந்துகொண்டு அன்னம் போல் நடந்துவந்தார். 

ஆசை உரை

ஐயா பெரியவரே 
அறிவுள்ள சங்கமரே 
தீரப் படித்தவரே 
தெளிவுள்ள சங்கமரே 
புதிதாய்த் தபசு பண்ணப் 
புத்தி மெத்த கற்றவரே

எங்கிருந்து போறீர்கள் 
இயலான சங்கமரே 
கோடி சரணம் ஐயா
மும்பிட்டேன் நான் - என்றார் 

உம்மைக் கண்டபோதே
உருகுதே தேகமெல்லாம் 
காமக் கலை வேண்டும்  
மன்மதக் கலை வேண்டும்

அரைநாழி என்னை
அணைத்திருந்து போகக்கூடாதா
ஒரு நாழி என்னுடனே 
உளம் மகிழ்ந்து பாகக்கூடாதா
என் மார்பைப் பார் 
தோளைப் பார் 
வண்ண முலையைப் பார் 
என் அழகைப் பார் 

என்னைப்போல் அழகி எங்கே கிடைப்பார்கள் 

தேடக் கிடைக்காது  
தேசத்தில் கிட்டாது 
காணக் கிடைக்காது 
கலியுகத்தில் கிட்டாது 

மார்போடு அணைத்து 
மகாவிடாய் தீரும் ஐயா
தோளோடு அணைத்து
சுகம் மெல்ல தாரும் ஐயா

பஞ்சணை மெத்தையிலே
கொஞ்சி விளையாயாடும் ஐயா
குங்கும மெத்தையிலே 
கூடி விளையாடும் ஐயா
என்று வழி மறித்தாள். 

அருச்சுனன் அழகியை ஏரெடுத்துப் பார்த்தான்
 
எண்ணாத எண்ணங்களை யெல்லாம் ஓட்டினான்
கன்னியரிடம் மயங்காதே என்று மாயன் சொன்னதையும் நினைத்தான் 

அரன் இருக்கும் கைலாசம் செல்கிறேன் 
வம்பு பண்ணாதே
வழி மறிக்காதே 
நீ என் தாய், தங்கை, அக்கா போன்ற பெண் நீ
தூரத் தள்ளி நில் 
தோசம் பண்ணாதே 
என்று சொல்லிக்கொண்டு நடந்தான் 

அழகி சொன்ன நீதி

பெண்சாதி வந்தால் பெற்ற தாய் என்னலாமா
முறைப்பெண்ணை ஆத்தாள் என்னலாமா

ஆண்டிக்கு முறை இல்லை 
அரிவாளுக்கு உறை இல்லை 
எருகுக்குப் பேச்சு இல்லை 
இடையனுக்கு முறையும் இல்லை 

அரைநாழி போகம் அமர்ந்திருந்தால் போதும் ஐயா
மார்போடே மார்பு அணைத்து மருவி முத்தம் தாரும் ஐயா

தின்னப் பழம் இருக்கச் சேனை தூரம் போவானேன் 

கட்டிலுண்டு மெத்தை உண்டு
கால்பிடிக்கத் தாதி உண்டு 

சோழிச் சதுரங்கம் சொக்கட்டான் ஆடலாம் வா
தின்ன நல்ல பாக்குமுண்டு 
செலவழிக்க ரொக்கம் உண்டு 

வாரும் ஐயா சங்கமரே
மனைக்கு நாம் போயிருப்போம்   

தானாக வந்த பெண்ணைத் தள்ளிவிட்டுப் போகலாமா

போனால் பலன் இல்லை 
பித்தனைக் காணல் அரிது 

விளையாடிப் போனாலே வித்தகரைக் கண்டிடலாம் 

இவ்வாறு சொல்லிக்கொண்டு முலையைத் தூக்கிக் காட்டினாள் 

கொல்ல

வழி மறித்தவளை அருச்சுனன் கொல்ல நினைத்தான்
வில்லை எடுத்து நாண் பூட்டினான் 

மோகினி மறைந்துவிட்டாள். 

மாயன் அங்கே வந்தார் 
இது மாயனின் மாய வேலை என்பதை உணர்ந்துகொண்டான்
மாயனை வணங்கினான் 

மாயன் துவாரகை மீண்டான்

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

மோகினி


No comments:

Post a Comment