Pages

Wednesday, 10 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 141


  • மாங்கனி மீண்டும் மரத்தில் பொருந்திக்கொள்ளச் செய்யுமாறு தருமர் மாயனை வேண்டினார். 

மாயன் சொன்னார்

உங்கள் மனத்தில் இருக்கும்  எண்ணங்களை ஒவ்வொருவரும் ஒளிக்காமல் என்னிடம் சொன்னால் அறுந்த பழம் மரத்தில் இருந்த இடத்தில் ஒட்டிக்கொள்ளும் 

சொல்லாவிட்டால் மடிந்து போவீர் - என்றார்

தருமர் சொன்னது 

பெரிய தந்தை பெற்றெடுத்த துரியோதனனும் அவன் தம்பியரும் சுகமாக இருந்து நாங்களும் நாடாளவேண்டும் - என்றார்

அப்போது மாங்கனி 200 யோசனை உயரம் சென்று நின்றது. 

வீமன் சொன்னது 

திருதராட்டிரன் மக்கள் 101 பேரையும் அவர்களின் படைகளையும் அழிக்க வேண்டும். 
பாஞ்சாலியின் துகிலை உரித்த துற்சாதனன் உடலைக் கிழித்து அவன் உதிரதைக் குடிக்க வேண்டும் 
அந்த உதிரத்தைத் துரோபதை தன் தலைமுடியில் தடவிக்கொண்டு தன் தலையை முடிந்து கொள்ளவேண்டும் - என்றான்

மாங்கனி மேலும் 200 யோசனை உயரம் சென்று 400 யோசனை உயரத்தில் நின்றது 

அருச்சுனன் சொன்னது 

கர்ணன்
சகுனி
காங்கேயர் படை
அனைத்தையும் அழித்து
அண்ணன் தருமருக்குப் பட்டம் கட்டி 
அவர் ஆளும்போது அவர் முன் நான் கை கட்டி நிற்க வேண்டும் - என்றான்

மாங்கனி மேலும் உயர்ந்து 600 யோசனை உயரத்தில் நின்றது 

நகுலன் சொன்னது 

திரியோதனன் படைகள் சேனைகளைக் கொன்று அழித்து 
அண்ணனுக்குப் பட்டம் கட்டிப் பார்க்க வேண்டும்

மாங்கனி மேலும் உயர்ந்து சென்று 800 யோசனை உயரத்தில் நின்றது

சகாதேவன் சொன்னது

உன் பாதத்தை என் தலையில் வைத்துக்கொண்டு உக்கிரமாய்ப் போரிட்டு அண்ணனுக்குப் பட்டம் கட்டி ஆளவேண்டும் 

மாங்கனி 900 யோசனை தூரம் உயர்ந்த இடத்துக்குச் சென்று நின்றது. 

துரோபதை 

  • பாஞ்சாலன் பெற்ற பெண்ணே
  • பத்தினியே துரோபதையே
  • நெருப்பில் பிறந்தவளே
  • நீலப் பசுங்கிளியே
  • ஐவருக்கும் தேவியரே
  • அழியாத பத்தினியே
  • மனத்தில் நினைத்ததை மறைக்காமல் சொல்லும் - என்றார் மாயன்

துரோபதை சொன்னது

  • துரியோதனன் நாட்டை அழித்து
  • ஐவர் சபதம் நிறைவேறி
  • வீமன் கையால் பாம்புக் கொடியோன் பட்ட பின் 
  • மல்லாந்து கிடக்கும் அவன் மார்புப் பலகையில் இருந்துகொண்டு  
  • அவன் உதிரத்ததை என் தலையில் தடவி
  • அவன் மார்பு எலும்பால் என் தலையை வாரிக்கொள்ள வேண்டும் 
  • அவன் குடலைப் பிடுங்கிக் கயிறாக்கி என் கொண்டையை முடிந்துகொள்ள வேண்டும் - என்பது என் விருப்பம் 

900 யோசனை உயரம் சென்ற மாங்கனி 
தொப் - என்று கீழே விழுந்தது 

  • உன் மனத்தில் கபடு இருக்கிறது என்றார் - என்றார் மாயன் 

துரோபதி  மாயனிடம் மேலும் சொல்கிறாள்

பார்த்தனை மாலையிடப் பாஞ்சாலன் என்னைப் பெற்றான் 
நான் 
வயிற்றில் பிறக்கவில்லை 
குடலில் பிறக்கவில்லை 

  • ஓடும் நீருக்கு அடியில் மணற்சேறு உண்டு 
  • அடிக்கின்ற காற்றில் அலையும் துரும்பு உண்டு
  • கால விஷம் உண்டவர்க்குக் கண்டத்தில் கருமை உண்டு 
  • நீரில் சுழல் உண்டு 
  • நிலத்தில் பூச்சி உண்டு 

  • தண்ணீரில் நிழல் தெரியும் 
  • சந்திரனில் கறுப்பு உண்டு 
  • குன்றிமணி ஆனாலும் கொஞ்சம் கறுப்பு உண்டு 

  • எனக்கு 
  • மையே கறுப்பு ஒழிய மற்ற கறுப்பு இல்லை 
  • பொட்டே கறிப்பு ஒழிய மற்ற கறுப்பு இல்லை 

  • அக்கினியில் பெண் பிறந்தேன் ஐவரை மாலையிட 
  • நெருப்பில்  பெண் பிறந்தேன் அருச்சுனரை மாலையிட 
  • என் 
  • கூடப் பிறந்தது கோதண்டமான வில்லு 

பத்தரையில் நான் வளர்ந்தேன் பார்த்தரே வேணுமென்று 
அடுக்கரையில் நான் வளர்தேன் அருச்சுனரே வேண்டும் என்று

வளர்ந்து சமைந்தேன் மாலையிடும் நாள் ஆனேன் 
போத வளர்ந்தேன் பிள்ளை பெறும் நாள் ஆச்சே 

இப்படியாக இருக்கின்ற வேளையிலே 

எழிலான அருச்சுனற்கு என்னைக் கொடுக்கவென்று 
என் தகப்பன் பாஞ்சாலன் எண்ணி இருக்கையிலே 

அரக்கு மாளிகையில் ஐவர் மடிந்தார் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர் 
என்னை யாருக்குக் கொடுப்பதென்று என் தந்தை கவலை கொண்டார்

அப்போது அங்கு வந்த வியாசரை என் தந்தை வணங்கினார் 

வியாசர் சொன்னபடி

அவளுடன் பிறந்த வில்லை எடுத்து நிறுத்தும் என்றார்  
வில்லை வளைத்தவர்க்கு பெண் தருவேன் என்று என் தந்தை சொன்னார் 

56 தேச அரசர்களும் வந்தனர் 
கர்ன மகாவீரர் வந்திருந்தார் 

நீர் அருச்சுனருடன் பார்ப்பானாய் வந்திருந்தாய்

வில்லை வளையுங்கள் - என்றார் என் தந்தை 

அந்த வில்லை யாராலும் எடுக்கவே முடியவில்லை 

காசி நாட்டை ஆண்ட கர்னர் வந்தார் 
வில்லை எடுத்தார் 

  • நாணில் அம்பை ஏற்றினார் 
  • அப்போது நான் கர்னரே என் புருஷன் 
  • அவருக்கே மாலையிட வேண்டும் 
  • என்று என்னினேன் 

  • அவர் வில்லை வளைக்காமல் 
  • வில்நாண் தெரித்து விழுந்தார் 

  • பின்னர் அருச்சுனன் வளைத்தார்
  • ஐவருக்கு மனைவி ஆனேன் -  என்றாள் 

மாம்பழம் காம்பில் ஒட்டிக்கொண்டது

  • பாஞ்சாலி தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படையாகச் சொன்னதும் தரையில் விழுந்த மாம்பழம் தானே உயர்ந்து சென்று தன் காம்பில் ஒட்டிக்கொண்டது 

மாயன்

  • இடர் வந்தால் என்னை நினையுங்கள் என்று பாண்டவர்க்குச் சொல்லிவிட்டு மாயன் திரும்பினார்.

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

No comments:

Post a Comment