Pages

Tuesday, 26 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 40

பக்கம்  37

புலந்திரன் 
கோட்டைக்குள் 
வருகிறது

அந்தச் சமயத்தில் அழகு புலந்திரனும் 
ஆகாய மார்க்கத்திலே ஐவர்மகன் புரவி 
மேலாய்ப் பறந்து வேந்தனது தன் புரவி 

யாரும் அறியாமல் அங்கொருவர் காணாமல் 
ஆறு சுற்றுக் கோட்டைக்குள்ளே அங்கொருவர் காணாமல்
தாதியர்கள் அண்டையிலே தாவி இறங்கியது 

ஏறிட்டுப் பார்த்திருந்தார் இந்திரரும் அப்போது 
ஒக்க பணி பூண்டு ஒருநிறமாய்ப் பட்டுடுத்தி

கூடப் பணி பூண்டு கொம்பனைமார் பட்டுடுத்தி
தேன்மொழிமார் எல்லோரும் சேரப் படுத்திருந்தார் 

அது கண்டு புலந்திரனும் ஐவரை மனதில் எண்ணி
ஆறாயிரம் பேரில் ஆர் என்று நான் காண்பேன் 

ஆர் என்று சற்றே நான் ஆராய்ந்து பார்ப்பேனோ

பூவணை மெத்தைகளில் பொற்கொடிமார் படுத்திருக்க 
ஆர முலையாளை ஆர் என்று நான் காண்பேன்

ஏதுக்கு இங்கு வந்தேன் என் தாயார் கட்டளையால் 

மண்ணூழி காலமெல்லாம் வையத்தை ஆண்டாலும் 
பெண்புத்தி இப்போ பிடரியிலே என்பார்கள்
 
ஏதுக்கு நம்மை இங்கே இசைந்து வர விட்டாளே

என்று புலந்திரனும் நெடுமூச்சு தானெறிந்து 

கட்டழகி நாயகியைக் கண்டதில்லை எந்நாளும் 
காணாமால் நாமு கன மதுரை போனாக்கால் 

வாளால் துணிப்பாளே மைந்தன் என்று பாராளே 
வேந்தர் பெருமானும் விசாரம் இடும்போது

புரந்திரனை
புரவி
இறக்கியது

அப்போது தன் புரவி அந்த இடம் விட்டு 
மாது இருக்கும் அந்த வாசற்படி முன்னாலே 
கொண்டுவந்து விட்டது கொற்றவனார் தன் புரவி

தாழ இறங்கியே தருமர் திருமகனை
மேல் பறந்து நின்றது வேந்தனவன் புரவி 

புலந்திரன் 
கதவைத் திறந்தது

தாள் பூட்டி இருந்ததொரு தையலது பொற்கதவு 
மந்திரவாள் தானெடுத்து கைத்தார் மணிக்கதவில் 

தானாய்த் திறந்தது தையலது பொற்கதவு 
மெல்ல நுழைந்தாராம் மெல்லி படுக்கையிலே

புலந்திரன்
பெண்சாதியைக் கண்டது

வாசற்படி தனினே வந்து நின்ற மன்னவனும் 
வாள்மேலே கை வைத்து மன்னவரும் பார்த்தாராம் 

ஏறிட்டுப் பார்த்தார் இந்திரரும் தேவியரை 
வளர்ந்தெழுந்த மார்பும் மாது இரு ஸ்தனமும்  
திரண்டெழுந்த பூ முலை மேல் செந்தாமரை அழகும் 
  • கண் புருவம் ரெண்டும் கருங்குருவி வால் அதுபோல் 
  • மூக்குத் திரு அழகும் மூன்றாம் பிறையது போல் 
  • நாக்குத் திருவழகும் நான்காம் பிறையது போல்
  • பல்வரிசை ஆணிமுத்தும் பார்க்க முடியாது 
  • தாடை இருபுறமும் தங்கப் பலகையைப் போல் 
  • இரு துடையின் தன் அழகும் இளவாழைத் தண்டினைப்போல்
அழகு திருமார்பில் ஆபரணச் சோதி மின்ன
மாறாமல் பூண்டதொரு மாணிக்கம் நின்றிலங்க 

கண்டு புலந்திரனும் கண்கள் ரெண்டும் கொள்ளாமல் 
இப்படிக்கு மீறி ஏந்திழையும் வளர்ந்திருக்க 

வைத்தேன் அவன் சிறையில் மாபாவி ஆனேனே

பள்ளியறை சோடிப்பைப் பார்த்தார் பலகாலும் 
வண்டார் குழலாளும் வாழாப் பெண்ணாய் இருக்க

மாதுக்கு மாமன்மார் வைத்த வரிசைகளோ 

ஏறிட்டுப் பார்த்து இந்திரரும் எத்திசையும் 

மெத்தை அலங்கரித்து மேற்கட்டி தான்கட்டடி 
சுற்றி அலங்கரித்து தோரணம் தான்கட்டி

தூணுக்குத் தூணு துணைமாலை தூக்கி வைத்து 
கண்ணாடி சல்லி கட்டி கனக்க அலங்கரித்து 

நான்கு புறமும் நவரத்தினக் கால் நிறுத்தி
சங்கு இழைத்த சப்பிரமும் சாதிலிங்க மாலைகளும்

சித்திரம் சேர் மண்டபமும் சேர அலங்கரித்து 
மல்லிகை முல்லையுடன்  வாய்த்த சிறு செண்பகமும் 
வந்து பரிமளங்கள் வாசனைகள் தான் வீச 

முத்தாலே தோரணங்கள் முறைமுறையாய்க் கட்டி(யி)ருக்க 
பந்தலிலே நல்ல பவளக்கால் தூணிருக்க 

சித்திரம் சேர் பூம்பட்டை சிறுக மடித்திட்டு 
சாறு மணை போட்டு தழுவணையும் தான் போட்டு 

ஊணாகப் பூச் சொரிந்து ஓட மலர்க் கண்ணாட்கு
காம்பு அரிந்த ஐங்கலப்பூ காரிகைக்ககுத் தான் சொரிந்து 

மெல்லிய பூம்பட்டு மேலே அணைபோட்டு 
சந்தனமும் சாந்தும் தையலர்க்குத் தானுமிட்டு
 
புனுகுடனே கஸ்தூரி போகவே தான் வைத்து 
மடித்த இலைச் சுருளும் வண்ணப் பல காயும் 

செம்பொன் தளிகை திருவணைக்கு வைத்திருக்க

தங்கப் பதக்கம் வைத்து சந்தனக் கிண்ணம் வைத்து 
கெண்டியிலே தண்ணீரும் கிளிமொழிக்கு வைத்திருக்கும் 

கற்பூர முத்து காராவி நெய் வார்த்து 
குத்து விளக்கு கொளுந்துபடத் தானேற்றி 

இரு புறமும் குத்து விளக்கு எரிய ஏந்திழைக்கு 
பொம்மை பதுமைக்களும் கொற்கொடியைச் சூழ்ந்திருக்க 

அன்ன நடையாட்கு அறு பதுமை தானிருக்க 
வெண் சாமரை வீச மெல்லியற்குப் பொம்மையெல்லாம் 
கட்டழகி நாயகிக்குக் கைவிளக்கு கொண்டு நிற்க 

ஆர முலையாட்கு ஆலாத்தி கொண்டு நிற்க 

செம்பிலே தண்ணீர்கள் சில பொம்மை கொண்டு நிற்க

பொம்மைப் பதுமைகளைப் புலந்திரன் தான் பார்த்து
வரும்போது சொன்னாளே வைகைவள நாட்டியரும் 

ஆராய்ந்து மெத்தையை அன்புடனே தான் பார்த்து 
பார்த்திருந்தோம் என்று சொல்லிப் பதறி எழுந்திருந்து 
வாள் உருவி கை பிடித்து மன்னர் பெருமாளும் 
மாணிக்க மெத்தையை மன்னவனும் சுற்றி வந்தான்

பொம்மையைக் கண்டானே பின்பு ஒரு பெண் என்று அறியான் 
நீங்களோ என்று சொல்லி நின்று இலங்கு பூ முடியான் 

தானும் சிரித்துமே தனஞ்செயன் கிட்டிவந்தான் 
ஏறிட்டுப் பார்த்தாரே இந்திரரும் தேவியரை 

கொண்டை முடியழகும் கொம்பனையாள் சீரழகும் 
பொருந்து மயிரழகும் பொன்பிறை சுட்டிகளும் 

கட்டழகி நெற்றியிலே கஸ்தூரிப் பொட்டழகும் 
இட்ட திருநீறு இரு காதில் குழை அழகும்

மாணிக்கம் மின்னவே வைடூரியங்கள் மின்ன 
ஆணிப் பொன்னால் இழைத்த அன்னத் திருக் கொப்புகளும்

மாணிக்க வாளி மயிரின் கீழ் சோதி மின்ன 
ஊஞ்சலிட்ட காதுக்கு ஒற்றைப் பணிதிகளும் 

காரைக் கழுத்து அழகும் கட்டிவடம் தன் அழகும் 
பாரிய ரெட்டை பவழத்துத் தாழ்வடமும்

முன்கை மதாரிகளும் முழு கடக மோதிரமும்
சந்திர கடகமும் தாயித்து சோதி மின்ன 

அஸ்த கடகமும் அழகான மோதிரமும் 
பாடகத் தோடும் பணிச்சில்லம்பு சோதி மின்ன 

காலாழி பீலிகளும் கட்டழகி சீர்வடிவும் 
காலில் கரிய குழல் வரைக்கும் 

ஏறிட்டுப் பார்த்தாரே இந்திரரும் தேவியரை
ஈஸ்வரனார் தேவியவள் ஈஸ்வரியும் ஈடு அலவே

மாயவனார் தேவியவள் மாதும் எதிர் அலவே 
இந்திரனார் தேவியவள் இந்திராணி ஈடு அலவே 

தாமக் குழலாளைத் தட்டி எழுப்பினால் 
கூவி எழுந்திருப்பாள் கொம்பனைக்கு என்ன சொல்வேன் 

ஓடி வருவாரே உண்டான காலர்கள் 
என்றே புலந்திரன் விசாரம் இட்டு நின்றானே

(பெண்ணைப் புலந்திரன் எழுப்புதல்)

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல் 

No comments:

Post a Comment