Pages

Friday, 22 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 21

பக்கம்  19

புலந்திரனை அலங்கரித்தது

மைந்தன் இருக்கிறதோர் மண்டபம் சென்று ஏறினாள்

மாலை முடியானே மஞ்ச நீர் ஆடும் என்றாள் 

மஞ்ச நீர்ச் சாலையிலே மன்னவனும் போய்ப் புகுந்து 

ஆடை களைந்து வைத்து ஆபரணம் தான் கழற்றி 
கத்தியுடனே அங்கி காவலும் தான் கழட்டி

சேரவே தான் கழட்டி செம்பொன் மணிமுடியான்
கொற்றவர்கள் கோமானும் குளித்துக் கரை ஏறினான் 

துப்பட்டி கொண்டு துவட்டினார் சுந்தரிமார் 

ஈரம் உலரவே இணை கவரி வீசினார்கள் 

ஆடை எடுத்து உடுத்தி ஆபரணம் தான்  பூட்டி 
கச்சை வரிந்து கட்டி கத்தி மிகச் சொருகி 

தென்னன் முடிவேந்தன் திருநீற்றுக் காப்பு அணிந்து
சிந்தித்து நின்று சிவனை அடிபணிந்து 

செங்கழுநீர்ப் பூ எடுத்து சிவனாரைத் தோத்தரித்து 
கஸ்தூரி பொட்டும் இட்டு கண்ட பெண்கள் சேர்ந்திடவே 
மாணிக்க மண்டபத்தில் மன்னவனும் சென்றானே 

சிங்காதனத்திலே திரள் வீரன் வீற்றிருந்தான் 
அரசாளும் நாயகியார் அல்லியரும் கூறுகிறார் 

மைந்தர் புலந்திரனை மயிலனையாள் தான் பார்த்து 
ஆனந்த வாழ் மார்பா அடிசிலுக்கு வாரும் என்றாள் 

சிங்காதனத்தை விட்டுத் திகழக் குதித்து இறங்கி
அமுது உண்ணும் மண்டபத்தே ஆணழகன் சென்றானே

அரசாளும் நாயகியாள் அல்லியரும் கூறலுற்றாள் 

இரும் இரும் என்று இணை கடகக் கையமர்த்தி 
பொற்கொடிக்கு மேலே புலந்திரனும் வீற்றிருந்தான் 

சிங்க முக்காலி செம்பொன் தளிகை வைத்தாள் 

கைக்கு நீர் வார்த்தார்கள் காவலனார் வீரியற்கு
நீர் சுழற்றி ஊற்றி நிகர் வளை முன்கையாலும்
போனகம் வாங்கிப் புரிகுழலாள் தான் படைத்தாள் 

பத்து வகைக் கறியும்  பதினட்டுப் பச்சசடியும்
நீர் கடகக் கையாலே நீர் எடுத்தாள் கொடுத்தாள் 

அறிவுடை நாயகற்கு ஆகாரம் தான் கொடுத்தாள் 
அந்த அடிசில் அமுது உண்ட பிற்பாடு 

அத் தளிகை மாற்றி பொன் தளிகை முன்னே வைத்து 
போனகம் வாங்கி புரிகுழலாள் தான் படைத்து 

காய்ச்சிய பாலும் காட்டு மாங்கனிப் பழமும் 
திரித்தி அமுதும் செலுத்திய நெய் பாலும் 
கூட்டிப் படைத்தார்கள் கொம்பனை மார் தாதியர்கள் 

அந்த அடிசில் அமுது உண்ட பிற்பாடு
கை கழுவ நீர் வார்த்தார் காரிழைமார் தாதியர்கள் 

உத்தமி மைந்தனுமாய் ஒக்க உரா கொடுத்து 
சித்திரம் சேர் மண்டபத்தில்  தேன்மொழியாள் வீற்றிருக்க
 
முடிவு பூஞ் சந்தமும் மெல்லியரும் தான் வாங்கி 

அடைக்காயும் வெள்ளிலையும் அன்பாகத் தான் வாங்கி 
மைந்தருக்குத் தான் கொடுத்து மாது நல்லாள் அப்பொழுது

தானும் இலையமிர்தம் தையலரும் தின்றாளே

மாதா இளைப்பாற வான் கவுரி வீசினார்கள் 

தாமக் குழலாள் தாதி முகம் தோக்கி 

கொண்டு வந்து பூட்டும் என்றாள் குமரன் புந்திரற்கு

மச்சினியாள் மெச்ச வகைவகையாய்ப் பூஷணங்கள் 
ஆபரணப் பேழை அலைகோதி தான் திறந்து
ஆனந்த மார்பனுக்கு ஆபரணம் தானெடுத்து 

தெரிந்த பணிதிகளை செம்பொன் தளிகை வைத்து 
கொண்டுவந்து முன்னே வைத்தாள் கொம்பேர் இடையாளும் 

தென்னர் பெருமான் திருமேனி நீண்ட வல்லான் 
ஆனந்த மார்பனுக்கு அருகாக வந்து நின்று 

முத்தின் உருமாலை முகன் அறியத் தான் தெரிந்து 
வேதிச்ச நற்புனுகால் மின்ன முகம் துடைத்து 

கட்டழகர் நெற்றியிலே கஸ்தூரிப் பொட்டும் இட்டு 

தேன் நல்கு தாரான் திருநீற்றுக் காப்பும் இட்டு

ஈரெட்டுப் பூண் கடுக்கன் இட்டு வில் அம் காதில்
அந்த முடி சுட்டி அழகாகப் பூட்டினார் 

ஒரு முத்தே முத்து உலகமெல்லாம் பெற்றது போல் 
பரிய முத்து பரிய  முத்துத் தாழ்வடமும்
நவரத்னப் பதக்கமும் நாகரிகத் தாழ்வடமும் 

ஆரப் பதக்கமும்  அழகுச் சரப்பளியும் 
பார்த்த பணிதிரமும் பருமுத்துத் தாழ்வடமும் 

முன்கை முதாரிகளும் முழு கடக மோதிரமும் 
சந்திர கடகங்கள் தாயத்துச் சோதி மின்ன
அஸ்த கடகமும் அழகான மோதிரமும்

முத்திரை மோதிரமும் முன்கையில் கடகமும் 
பசும்பொன் பவுத்திரமும் சேர்த்த கணையாழிகளும் 

பொன்னின் அரைஞாணும் பூட்டினார் பொற்சலங்கை
கச்சை இறுக அணைத்து கத்தி மிகச் சொருகி 

பாங்குகள் தான் சொருகி பாலனிட காலில்
பூஞ்சிலம்பும் தண்டையும் பொன் மெட்டும் தான் அணிந்து

ஆபரணமெல்லாம் அடங்கலும் தான் பூட்டி 

இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்னப் பச்சைவடம்
ஆனந்த மார்பனுக்கு ஆடை வரிந்து கட்டி 

நிரஞ்சனமாகவே நிறைந்ததே மேனியெல்லாம்
இப்படியாக இயலாய் அலங்கரித்து 

அரசாளும் நாயகியாள் அல்லியரும் கூறலுற்றறாள்

மைந்தர் புத்திரரைப் பார்த்து வல நாடி 
கண் திருக்ஷ்டி வாராமல் காப்பிடுங்கள் தாய் என்றாள் 

சந்தனமும் சாந்தும் சவ்வாதும் மிக அணிந்து 
ஆலாத்தி காட்டும் என்றாள் ஆனந்த மார்பனுக்கு 
முத்தாலே ஆலாத்தி முப்பது நூறாயிரம் பேர் 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் 
இயற்றிய நூல் புலந்திரன் களவு மாலை

அரசன் ஒப்பனை

No comments:

Post a Comment