விஞ்சையன்
விஞ்சை வீரன் ஒருவன் தான் இன்பம் துய்த்த இமயமலைப் பேரழகிக்கு புகார் நடக்கும் இந்திர விழாவைக் காணும் ஆசையை உண்டாக்கினான்.
சோழனின் புலிச்சின்னத்துக்கு துணைநிற்கும் பூதம் விழாவில் பலியுணவு பெறுவதைப் பார்க்கலாம் என்றான்.
கங்கை, விந்தமலைக் காடு, வேங்கடம் முதலானவற்றைக் காட்டிக்கொண்டு புகார் நகரம் வருகிறான்.
மாதவி ஆடும் 11 ஆடல்களைக் காட்டுகிறான்.
![]() |
| விஞ்சை வீரனும் காதலியும் Drawn by AI technology |
மாதவி ஊடலும் கூடலும்
இந்திர விழாவின்போது மாதவி பலரும் பார்க்கும்படி ஆடினாள் என்று கோவலன் ஊடுகிறான். அவன் ஊடலைத் தீர்க்கும் வகையில், அவன் ஆசையைத் தூண்டுமாறு ஒப்பனை செய்துகொள்கிறாள். 10, 5, 32 வகை மணப்பொருள் பூசி நீராடல், கூந்தல், கால், இடை, தோள், முன்கை, விரல், கழுத்து, காது, தலை, முதலானவற்றின் அணிகலன்கள் இங்குச் சொல்லப்பட்டுள்ளன.
முழுநிலா நாள் முடிந்த மறுநாள் காலை வைகறை நேரம். மக்கள் கடலோரக் கானலில் விளையாடுவதைக் காணும் விருப்பத்துடன் கோவலன் அத்திரிக் குதிரை மேல் ஏறிக் கோவலன் சென்றான். ஊர்மேடை, சாவடி, மங்கலத் தாசியர் திருமகள் கோயிலை அழகுபடுத்துதல், மீனவர் தெரு, வெளிநாட்டினர் வாழும் தெரு - ஆகியவற்றைக் கடந்து சென்றான்.
ஒப்பனை, உணவு, கள், மீன் - விற்பவரின் விளக்கு, திரும்பும் மீனவர் விளக்கு, மொழிபெயர்ப்பு செய்வோர் வைத்திருக்கும் விளக்கு, பண்டம் பாதுகாக்ககும் விளக்கு முதலானவை எரிந்துகொண்டிருந்தன. தாழை மணக்கும் நெய்தலங்கானலில் மாதவி விளையாட்டுத் தோழியருடன் இருந்தாள்.
குமரரும் மகளிரும் கரிகாற்சோழன் பிறந்த நாள் கொண்டாட்டம் போலக் குழுமியிருந்தனர்.
மாதவியின் தோழி வசந்தமாலை கையில் இருந்த யாழை வாங்கித் தன் கையில் வைத்துக்கொண்டு மாதவி அமர்ந்திருந்தாள்.
7
கானல் வரி
யாழ் சரியாக இருக்கிறதா என்று பண்ணல் முதலான 8 பாங்குகளில் ஆராய்ந்து பார்த்தாள். வார்தல் முதலான 8 முறைகளி வருடி இசையைக் கேட்டுப் பார்த்தாள். "நான் என்ன பாணி பாடவேண்டும் என்று பாடிக் காட்டுங்கள்" என்று வேண்டி, யாழைக் கோவலன் கையில் கொடுத்தாள். யாழை வாங்கிய கோவலன் மாதவி மகிழுமாறு யாழை மீட்டிக்கொண்டு பாடலானான்.
கோவலன் பாடுகிறான்
காவிரிப்பெண்ணே! உன் கணவன் சென்னி. அவன் கங்கைப்பெண்ணைப் புணர்ந்தாலும், நீ அவன்மேல் ஊடல் கொள்ளமாட்டாய் என 3 பாடல் பாடினான். (ஆற்று வரி) (முகமுடை வரி)
தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் காலத்திலும் தலைவி தலைவனை நொந்துகொள்ளாமல் இருப்பது புகார் நகரக் கற்பு என்று 3 பாடல்கள் பாடினான். (சார்த்து வரி)
மீனவப் பெண்ணின் அழகில் மயங்கி வாடுபவன் போல 3 பாடல் பாடுகிறான். (முகமில் வரி)
மீனவப் பெண்ணின் அழகைப் பாராட்டும் 3 பாடல் பாடல் பாடுகிறான். (நிலை வரி)
மீனவப் பெண்ணின் கண்ணசைவு காட்டும் முகம் என்னை வருத்துகிறது என்று 3 பாடல் முடுகிசையில் பாடுகிறான். (முரி வரி)
மீனவப் பெண்ணின் இடையழகைப் பாராட்டி 3 பாடல் பாடுகிறான். (திணைநிலை வரி)
மீனவப் பெண்ணின் கண்ணழகைப் பாராட்டும் 3 பாடல்
நடையழகு ஒரு பாடல்
மாதவி பாடுகிறாள்
கோவலன் வேறொருத்தியை விரும்பிப் பாடுகிறான் என்று ஊடல் கொண்டவள் போல, கோவலன் கையிலிருந்த யாழை வாங்கி இசைத்துக்கொண்டு பாடத் தொடங்குகிறாள்.
(சோழன் கங்கையைப் புணர்ந்தாலும் காவிரி ஊடமாட்டாள் - என்று கோவலன் பாடினான்) - அதற்குக் காரணம் சோழனின் வளையாத செங்கோல் ஆட்சியே - என்று 3 பாடல் பாடுகிறாள். (ஆற்று வரி)
காதலி காதலன் தந்த பூமாலையை ஏற்க மறுப்பதாக 3 பாடல் \ சார்த்து வரி
நண்டு தன் துணையோடு விளையாடுவதையும் என்னையும் அவன் பார்த்தான் - என்பது போல் 3 பாடல் \ திணைநிலை வரி
கடல் அலையே! அவர் தேர் சென்ற வழித்தடத்தை அழித்தாயே என்று சொல்லி முறையிடுவது போல் 3 பாடல் \ காமம் மிக்க கழிபடர் கிளவி
என்னைப் பார்த்து ஆசை கொண்டு சிரிக்கும் சேர்ப்பனே! (மீனவனே) உன் சிரிப்பு என் தாய்க்குத் தெரிந்தால் என்ன ஆகும்? - என்பது போல் 3 பாடல். \ மயங்கு திணைநிலை வரி
அவனை நினைத்து என் வளையல்கள் நழுவுகின்றனவே - என்பது போல் 3 பாடல்
என் சிற்றில் விளையாட்டை அழித்துவிட்டுச் சென்ற அவரை என்னால் மறக்க முடியவில்லையே - என்பது போல் 3 பாடல் \ சாயல் வரி
குருகே! என் காதல் நோயை அவரிடம் சொல்லவில்லையே - என்று ஏங்குவது போல் ஒருபாடல். \ முகம் இல் வரி
மாதவி விரல் யாழ் நரம்பில் தடுமாறியது
இப்படி உணரச்சி வயப்பட்டு பாடும்போது, தடுமாறிய அவள் விரல்கள் கைக்கிளை நரம்பில் பட அது கோவலன் பிரியப்போகும் அறிகுறியைக் காட்டுவதாக அமைந்துவிட்டது.
விரல்களே! தடுமாறிவிட்டாயே - என்று சொல்லிக் கலங்குவது போல் 3 பாடல் \ முகமில் வரி
தவறு செய்துவிட்டேன். கடல் தெய்வமே! பொறுத்துக்கொள் - என மாதவி வேண்டும் பாடல் ஒன்று
கோவலன் பிரிகிறான்
"நான் கானல் வரி பாடினேன். நீ வேறொருவனை நினைத்துக்கொண்டு பாடுகிறாய். நீ மாயக்காரி" - சொல்லிவிட்டுக் கோவலன் பிரிந்து சென்றுவிட்டான்.
மனம் கலக்கத்துடன் மாதவி பல்லக்கில் ஏறித் தனியே இல்லம் திரும்பினாள்.
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
![]() |
| யாழ் மீட்டும் அழகி Drawn by AI technology |


No comments:
Post a Comment