Pages

Monday, 16 November 2020

நீராட வாராய் Come to bath 2-4

செவிலித்தாய் கண்ணனை நீராட அழைத்தல்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ் விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே. நாரணா. நீராட வாராய். 1

கன்றுகள் ஓடச் செவியில் கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய். நீ பிறந்த திருவோணம்
இன்று, நீ நீராட வேண்டும் எம்பிரான். ஓடாதே வாராய். 2

பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா. மஞ்சனம் ஆட நீ வாராய். 3

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய் முலைவைத்த பிரானே.
மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே. நீராட வாராய். 4

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறிதியேல் நம்பீ.
செப்பு இள மென் முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான். இங்கே வாராய். 5

எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே.
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ. மஞ்சனம் ஆட நீ வாராய். 6

கறந்த நற் பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானே.
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய். 7

கன்றினை வால் ஓலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டு ஆட்டினாய் போலும்
நின் திறத்தேன் அல்லன் நம்பீ. நீ பிறந்த திரு நல் நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா. ஓடாதே வாராய். 8

பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய். நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே. என் மணியே. மஞ்சனம் ஆட நீ வாராய். 9

கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை அசோதை மஞ்சனம் மாட்டிய ஆற்றை
பார் மலி தொல் புதுவைக்கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே. 10

பெரியாழ்வார் திருமொழி 2-4
நீராட்டல் 

கண்ணனைக் குளிப்பாட்டல்


No comments:

Post a Comment