Pages

Sunday, 1 October 2017

சிலப்பதிகாரம் 27-9 Silappathikaram 27-9

பொற்றேர்ச் செழியன்
கோவலன் தந்தை மாசாத்துவான் சமணத் துறவி ஆதல் 

பொற்றேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்- எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு
என் பதிப் பெயர்ந்தேன். என் துயர் போற்றி,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி,
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்;

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையில் பொற்றேர்ச் செழியன் அரசனான். இப்படி எல்லா நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் அறிந்துகொண்டு என் ஊருக்குச் சென்றேன். (புகார் நகரம்). என் துன்பத்தை அடக்கிக்கொண்டு செம்பியன் ஆளும் மூதூர் மக்களுக்குத் தெரிவித்தேன்.  

தன் மகன், தன் மருமகள், செங்கோல் வேந்தன் பாண்டியன் ஆகியவர்களுக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணிக் கவலன் தந்தை பெரிதும் வருந்தினான். தன்னிடமிருந்த மாபருஞ் செலவத்தைத் தானமாகப் பிறருக்கு வழங்கினான். இந்திர விகாரம் (சமணப்பள்ளி) ஏழினுள்ளும் புகுந்து அந்தர சாரிகள் 300 பேர் இயற்றும் தவ ஒழுக்கத்தைத் தானும் மேற்கொண்டு தன் பிறவித் துன்பம் நீங்க நோன்பு இயற்றலானான். 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை

No comments:

Post a Comment