Pages

Thursday, 22 December 2016

நற்றிணை 304 Natrinai 304

நீண்டு வளைந்திருக்கும் 
கதிரிலுள்ள தினையை 
இனத்துடன் சேர்ந்து உண்டுகொண்டு 
கிளிகள் 

அதிரும் காற்றில் 
யாழிலிருந்து எழும் ஒலி போலப் 
பேசி ஒலி எழுப்பும் 
குளிர்ந்த மலைநாட்டின் தலைவன் அவன். 

அவன் என்னிடம் உறவு கொண்டால் 
என் மேனியில் அழகு சேர்கிறது. 

அவன் என்னை விட்டுப் பிரிந்தால், 
பொன்னும் மணியும் சேர்ந்த 
அணிகலன் போலத் திகழும் என் மேனி 
அழகு கெட்டுப் பசலை நிறம் பாய்ந்துவிடுகிறது. 

அதனால், அவன் மார்பானது, 
அசுணத்தைக் கொல்பவர் 
யாழை மீட்டி 
அது மயங்கும்போது அதனைக் கொன்றுவிடுவது போல 

இன்பமும் துன்பமும் தருவதாக 
அவன் உறவு உள்ளது.

தலைவி தோழியிடம் 
இவ்வாறு கூறுகிறாள்.

அசுணம் – இசையில் மயங்கும் ஒரு விலங்கு அல்லது பறவை
எழில் – இயற்கை அழகு
குரல் = விளைந்திருக்கும் கதிர்
சிலம்பு = மலைக்காடு
நளி = குளிர்
பசலை – பசுமை நிறம்
பவளம் = சிவப்பு நிறப் பவளம்
மணி = நீலநிற மணி
வளி = காற்று
வாரல் = நீண்ட வளைவு
விறல் = பெருமை
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,              5
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.       10

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.
மாறோக்கத்து நப்பசலையார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


தினை

No comments:

Post a Comment