Pages

Monday, 12 December 2016

நற்றிணை Natrinai 279

வேப்பம் பழம் தின்று சலித்த வௌவால் 
பால் வற்றி இனிக்கும் 
இலுப்பை (இரும்பை)ப் பழத்தை உண்ண 
அதன் கிளைகளில் 
எண்ணெயில் தோய்ந்திருக்கும் விளக்குத் திரி போல, 
வீசும் பனித் துளியில் 
நனைந்துகொண்டு தொங்கும். 

பாலை நிலக் காட்டில், 
அதிகாலையில், 
வாள் போல் கோடுகளை உடைய வரிப்புலியோடு 
போரிட்ட யானையின் 
கால் போல, 

அந்த யானை தன் பெண்யானைக்காகப் பட்டை உரித்த 
ஓமை மரம் 
காலை வெயிலில் செந்நிறத்துடன் தோன்றும். 

அந்த வழியில், 
என் மகள் எப்படி நடந்து சென்றாளோ? 
திருமணத்தின்போது அவள் காலில் அணிந்திருக்கும் 
சிலம்பு அணிச் செல்வத்தைக் கழற்றுவார்களே, 

அப்போது அவளது காலடிகளைக் காணும் பேறு 
எனக்குக் கிடைக்கவில்லையே. 
பிறர் அல்லவா அதனைக் காணும் பேறு 
பெற்றிருக்கிறார்கள்.

மகள் விரும்பிய காதலனுடன் சென்றுவிட்டாள்.
அவள் திருமணத்தைப் பிறர் செய்துவைக்கின்றனர்.
அதனைக் காணும் பேறு 
தனக்குக் கிடைக்கவில்லையே என்று 
செவிலித்தாய் கலங்குக்கிறாள்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு      5
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையின கொல்லோ ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்     10
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

மகட் போக்கிய தாய் சொல்லியது.
கயமனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:

Post a Comment