Pages

Sunday, 11 December 2016

நற்றிணை Natrinai 278

பருத்த அடிமரம் கொண்ட புன்னையின் மொட்டுகள், 
வெயில்-நீர் ஓடுவது போல் தோன்றும் மொட்டுகள், 
அது தோன்றிய காம்புகளும் மணக்கும்படி வாய் மலரும். 

பொன்-துகள் போன்ற அதன் தாதுகளை உதிர்க்கும். 
மாந்தர் பறித்துச் சூடிக்கொண்டது போக 
எஞ்சிய பூக்கள் எண்ணெய்ப் பசை கொண்ட 
பசுமை நிறக் காய்களாகக் காய்த்துத் தொங்கும். 

இப்படிக் காய்த்துத் தொங்கும் 
நெய்தல் நிலத் துறையின் தலைவன் அவன். 

இனி அவனைத் தெரிந்துகொண்டேன். 
அவன்தான் உன் கணவன். 
திருமணத்துக்காக வந்துகொண்டிருக்கிறான். 

அவன் ஏறிவந்த அத்திரிக் குதிரையின் 
காலடிக் குளம்பு பதிந்த சேற்றுப் பள்ளத்தில் 
இறா மீன்கள் பதுங்குகின்றன. 

ஊதைக் காற்று வீசும் வெண்மணல் மேல் 
அவன் அணிந்த பூமாலையின் மலர்கள் 
உதிர்ந்து கிடக்கின்றன.

தோழி இப்படித் தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை      5
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.

தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.
உலோச்சனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


கொன்றை \ Kontrai 

No comments:

Post a Comment