Pages

Monday, 28 November 2016

நற்றிணை Natrinai 245

அவன் அணங்குகிறான்; 
நான் அணங்குற்றேன்; 

இது தெரியாமல் நான் அவன் உயிரைப் பறித்துக்கொண்டேன் என்கிறானே! 

நினைத்தால் சிரிப்பு வருகிறது. 
தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

தோழி! 
நினைத்தால் சிரிப்பே வருகிறது.

“தக்க அழகுடன் பூத்திருக்கும் 
முண்டக மலர்களில் சிறந்தனவற்றை ஆராய்ந்து பறித்து, 
கருமணி போன்ற கூந்தலின் 
ஐம்பால் ஒப்பனையில் சூடிக்கொண்டு, 
தனிமைப் பட்டிருக்கும் நீரலையில் 
தோழிமாருடன் சேர்ந்து விளையாடுகிறாய். 

மெல்லிய இடையும், 
அகன்ற அல்குலும் கொண்டவளாய், 
தெளிவாக, இனிமையாகப் பேசுகிறாய் 

இவற்றால், 
போனால் திரும்பப் பெறமுடியாத என் உயிரைப் 
பிடுங்கிக்கொண்டவளே, 
நீ யார்” 

என்று அவன் கேட்கிறான்.

அணிகலன் பூட்டப்பட்ட தேரில் 
குதிரைகளை ஓட்டிக்கொண்டு வந்து, 
என்னை அவன் மயக்கியதை உணராமல், 
என்னால் அவன் மயங்கியதாக் கூறித் 
தொழுதுகொண்டு நிற்கிறானே, 
இதனை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

அவன் 
பெருங்கடல் சேர்ந்த நிலப்பரப்பின் தலைவன் ஆயிற்றே!

கடல் பூங்கா வண்டுகள் 
நெற்றி வெளிச்சத்தில் மொய்க்கும் சிறுமிதானே நான்.
  • அணங்குதல் = அழகால் வருத்துதல் – செய்வினை
  • அணங்குறுதல் = அழகால் உறுத்தப்பட்டு வருந்துதல் – செயப்பாட்டு வினை

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

நகையாகின்றே தோழி! ''தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல்,         5
தெளி தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?'' என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல் 10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.
அல்லங்கீரனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


காதல் தாக்கம்

No comments:

Post a Comment