Pages

Friday, 25 November 2016

நற்றிணை Natrinai 237

தோள் மிகவும் பசலை நிறம் பெரிதும் பாய்ந்து தளர்கிறது. 
கண் முன்பு போல் இல்லாமல் கண்ணீர்ப் பெருக்குடன் காணப்படுகிறது. 

இனிய உயிர் போன்று பிரிக்கமுடியாத காதலர் உன்னை விட்டுவிட்டுக் காலம் நீட்டிக்கிறார் என்று நீ அவர்மீது புலவி கொள்ளும் சினத்துடன் ஊடுகின்றாய் அல்லவா? 

மடந்தைப் பெண்ணே! 
அங்கே பார் 
மழை மேகங்கள் பொழிவதற்காக வானத்தில் ஏறுகின்றன. 

அரசன் அண்டிரன் 
தன்னை நாடி இரவலர்கள் வருகிறார்கள் என்று 
அவர்களுக்கு வழங்குவதற்காக 
யானைக் கூட்டத்தைத் தொகுத்து நிறுத்துவது போல 

உலகம் மகிழும்படி மேகக் கூட்டம் வானத்தில் ஏறுவதைப் பார்.

மழைக்காலம் வரும்போது திரும்பிவிடுவேன் என்று சொன்னாரல்லவா? எனவே திரும்பிவிடுவார். கவலை வேண்டா.

இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
  • உவக்காண் = அங்கே பார்
  • புரவு = வழங்கும் பொருள் 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ? மடந்தை!      5
உவக்காண் தோன்றுவ, ஓங்கி வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே!         10

தோழி உரை மாறுபட்டது.
காரிக்கண்ணனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

கொடை

No comments:

Post a Comment