Pages

Tuesday, 22 November 2016

நற்றிணை Natrinai 223

இவள்தான்,
காம இன்பம் பெரிது என்று காலை வேளையிலேயே பூங்கானலுக்கு வருகிறாள்.

நீதான்,
இவன் மீதுள்ள அன்பின் மிகுதியால் இவளுக்கு அளி செய்யவேண்டும் என்று பகலிலும் இந்தப் பூங்கானலுக்கு வருகிறாய்.

இப்படி நீங்கள் இருப்பது இனிதுதான்.

ஊர் மக்கள் இவளை அலர் தூற்றும்போது இவள் வீட்டில் கட்டுக்காவலில் வைக்கப்படுவாள். அப்போது இவள் இங்கு வரமுடியாது.

எனவே, புலம்ப! இரவில் வருக. அதிலும் ஒரு சங்கடம். துறையில் இறா மீன்கள் மேய்வது போல, கண்ணுறக்கம் இல்லாமல் திரியும் பெண்கள் இவ்வூரில் உள்ளனர். அவர்கள் அலர் தூற்றுகின்றனர்.

எனவே திருமணம் ஒன்றுதான் நீங்கள் சேரும் வழி, என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
  • புலம்ப – புலம்பன் என்பதன் விளி \ மெல்லம் புலம்பு = மென்மையான நெய்தல் நிலம்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால்  5
எல்லி வம்மோ! மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.

பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது.
உலோச்சனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

இறா

No comments:

Post a Comment