Pages

Tuesday, 4 October 2016

அகநானூறு Agananuru 312

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

1
அவர் நெஞ்சும் உடன்பட்டு, ஒரு செயலைப் புரிந்து அடங்கி, இரவில் வரும் இன்னல்கள் நீங்க, திருமணம் செய்துகொள்ளக் கருதுமாயின், பெரிதும் மகிழ்ந்து, இந்தச் சிறுகுடியில் வாழும் மக்கள் என்ன பேசினாலும் பேசிவிட்டுப் போகட்டும் என்று, மலையிலிருந்து இறங்கும் அருவியின் பெருவெள்ளத்தில், நாளை கண்களில் மதமதக்கும் வரிகள் சிவக்கும்படி, மலைநாடன் மார்பைத் தெப்பமாக்கிக்கொண்டு நீராடலாம். என் காதலை அள்ளிக்கொடுக்கும் அழகிய தோழியே! வருக   
2
மூங்கில் அடர்ந்து கிடக்கும் மலையடுக்கம் புதையும்படி மழை கால் வீழ்த்திருக்கிறது. 

மன்னனின் புகழைப் பாடும் இன்னிசை முழக்கம் போல இடி முழங்குகிறது. 

வழுதி கையில் இருக்கும் வேல் போல மின்னுகிறது. 
மழை பொழிகிறது. 
நாளை வெள்ளம் வரும்.

வழுதி – பகைவரைப் போர்க்களத்திலிருந்து திரும்பி ஓடும்படிச் செய்து பார்த்துக்கொண்டிருப்பவன். முழங்கால் வரையில் நீண்டு தொங்கும் கைகளைக் கொண்டவன்.

எஃகம் – மழைமேகம் போன்ற போர்க்களத்தில் வழுதி ஓங்கும் புகழ் மிக்க வேல்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

1
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
வரையக் கருதும் ஆயின், பெரிது உவந்து,
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,                  5
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!
2
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் 10
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை,
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போல,
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!

தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது;
தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

மார்பு புணை ஆகும்படி நீராடல்
பாடல் ஆற்று வெள்ளத்தில் 

No comments:

Post a Comment