Pages

Wednesday, 28 September 2016

அகநானூறு Agananuru 293

“அவர் என்னை எப்படி மயக்கி வைத்திருக்கிறார் பார்த்தாயா”, தலைவி தன் தோழியிடம் இப்படிக் கூறுகிறாள்.  

1
இலைகள் உதிர்ந்த வேல மரம், சிலந்திக் கூட்டுடன், வலை விரித்தது போன்ற தலை விரி கோலத்துடன் காணப்படுகிறது. அது, ஆடை நெய்வோர் பா விரித்திருப்பது போன்ற வெயிலின் தாக்கத்தில் ஆடுகிறது. 

உகாய்க் காய்கள் மிக மிகச் சூடான முரம்பு நிலத்தில் குயிலின் கண் போன்ற விதைகள் முற்றி, மணிக்காசு போன்ற கருநிறத்தில் நெற்றாகி உதிர்கின்றன. 

இப்படி வேனில் காலத்தில் வீணாகிக் கிடக்கும் வழியில் நான் செல்லவிருக்கிறேன் என்கிறார், அவர்.
2
தோழி!

நான், ஆடுமாடு மேய்க்கும் கோவலர், தாயிடமிருந்து பிரித்துக் கட்டி வைத்திருக்கும் கன்றைக் போல மனம் நொந்து வேண்டாத சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்கின்றனர். 

அப்படியானால் அவர் என்னை எப்படி மயக்கி வைத்திருக்கிறார் பார்த்தாயா!

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்து அனைய ஆக, பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி,           5
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
செல்ப என்ப தோழி! யாமே,         10
2
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம்.
காவன்முல்லைப் பூதனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இலை உதிந்த கிளையில் சிலம்பி | சிலந்திக் கூடு

பச்சை மரத்தில் சிலம்பி | சிலந்திக் கூடு


No comments:

Post a Comment