Pages

Monday, 26 September 2016

அகநானூறு Agananuru 287

பொருளீட்டச் செல்லும் தலைவன் வழியில் இளைப்பாறுகையில் இப்படி நினைக்கிறான்.

1
வளையல் அணிந்த கையில், விரல்களைக் குவித்துக் கும்பிட்டுக்கொண்டு, நெஞ்சில் என்னை நினைத்து, பகல் காலம் துணையாக நிற்க என் மனைவி தவம் (படிவம்) செய்துகொண்டிருப்பாளோ? 

அவள் இரக்கம் கொள்ளத் தக்கவள்.  
2
வளர்ப்பு மான்கள் உரசிச் சொறிந்துகொள்ளும் பெரிய தூணை உடைய குடிசையில் சுரைக்கொடி ஏறிப் படர்ந்திருக்கும். 
அருகில் ஆலமரம் இருக்கும். 
அதன் விழுதுகள் குடிசை-மதில் போல் இருக்கும். 
நாள்தோறும் பொங்கலிட்டுப் படைக்கும் மேடை (இட்டிகை) கொண்ட அந்த ஆலமரத்து அடி இப்போது படைப்போர் இல்லாமல் வெறிச்சோடி நரைத்த தலை போல் கிடக்கும். 
கோடைக்காற்று வீசும்போது ஆலம் விழுது ஆடும். 
விழுது ஆடும்போது அதில் அமர்ந்திருக்கும் இணைப்புறாக்கள் பறந்தோடும். 
கோடைமழை பொழியும். 

இப்படிப்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டது, அவள் இருக்கும் அழகிய குடிசைகளைக் கொண்ட சிற்றூர்.

அங்கே அப்படி.  
3
இங்கே யா-மரத்து அருநிழலில் ஆண்மான் பெண்மானை நக்குகிறது.
அந்த நிழலில் நான் என் அசதியைப் போக்கிக்கொண்டிருக்கிறேன்.
பெண்மான் பருத்த கால்களை உடையது.
4
மாலை நேரத்தில் நெஞ்சக் குமுறல் (அரம்பு) என்னை அலைக்கிறது. நிறைவடையாத நீண்ட வழியில் வருந்திக்கொண்டிருக்கிறேன்.

இங்கே இப்படி

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
2
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்     5
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
3
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,      10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
4
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.

பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குடவாயிற் கீரத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

தொடியணி முன்கை தொகுவிரல் குவித்த படிவம் 

No comments:

Post a Comment