Pages

Monday, 19 September 2016

அகநானூறு Agananuru 270

காதலியுடன் கலந்திருக்கும் போதும் ஊருக்குத் திரும்புவதையே காதலன் நினைத்துக்கொண்டிருக்கிறான். தோழி திருமணம் செய்துகொள்ளுமாறு அவனை வற்புறுத்துகிறாள்.

1
இனமீன் வேட்டுவர் கழியில் மலர்ந்த நீல மலரையும், கரை மரத்தில் மலர்ந்த ஞாழல் மலரையும் சூடிக்கொள்வர்; புலால் நாற்றம் வீசும் சிறுகுடிப் பாக்கத்தில் வாழ்வர். 
அவர்கள் வாழும் புலம்பு நிலத்தின் தலைவன் நீ.
உன்னை நினைத்து இவள் தோள் வாடுகிறது.
2
இறா மீன் மண்ணைக் கிண்டிய நீர்நுரையை புன்னை மரத்தின் கிளை வளைந்து தொட்டுக்கொண்டிருக்கும் கானல் நிலத் துறையை நோக்கிக்கொண்டு இவள் வாடுகிறாள். (அவளும் அவனும் கூடுமிடம்)
3
குதிரை மேலும், தேர் மேலும் வந்து கொடை வழங்கும் கோமகன் குட்டுவன்
அவன் ஊர் கழுமலம் போல அழகிய மேனி கொண்டவள் இவள். 
இவளது அந்த நலம் தொலைந்து, கண்ணுறக்கம் இல்லாமல் துன்பப் பட்டுக்கொண்டிருக்கிறாள்.
4
நீயோ, கடவுள் இருக்கும் முள்மரத்தில் கட்டியிருக்கும் கூட்டில் கருநிறப் பெண்பறவை தன் சேவல் தன்னைப் புணராததால் துன்புறும் நள்ளிரவிலும் உன் ஊருக்குச் செல்வதையே நினைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு வருத்தமாக இருக்கிறது. திருமணம் செய்துகொண்டு இவளுடனேயே இருக்கவேண்டாமா?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்

1
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
2
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை   5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
3
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
அம் மா மேனி தொல் நலம் தொலைய,           10
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
4
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே.               15

பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.
சாகலாசனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

சிவன் ஆலமரத்தடியில்
பாடல் முள் மரத்தடிக் கடவுளைக் குறிப்பிடுகிறது

No comments:

Post a Comment