Pages

Thursday, 15 September 2016

அகநானூறு Agananuru 261

தன்னுடன் வந்த தலைவியை 
அழைத்துச் சென்ற பாங்கைத் 
தலைவன் 
பின்னொரு நாள் 
தலைவியின் தோழிக்குத் தெரிவிக்கிறான்.


காட்டுப் பாதிரி மலர் கருமையான இதழ்களைக் கொண்டது. 
அதிரல் ஒளி திகழும் மலர். 

பாதிரி, அதிரல் இருவகை மலர்களையும் இணைத்தும் தொடுத்து நான் என் காதலியின் ஐம்பால் ஒப்பனையில் சூட்டிவிட்டேன். 

மராம் பூவைக் கொத்தாகச் செருகி விட்டேன். 

“உன் வளையலும், சிலம்பும் இசைக்கும்படி கொஞ்சம் நடந்து காட்டு. 
உன் பின்னழகைக் காணவேண்டும் என்றேன்.” 

அவள் நடக்க நாணினாள். 

அவள் மானைப் போன்ற மடம் கொண்டவள். 
தலை குனிந்து நின்றாள். 

பின்னர் அவள் நடையைப் பார்த்துக்கொண்டே பின்தொடர்ந்தேன். 
முன்னால் செல்லவே இல்லை. 

சில இடங்களில் தங்கினோம். 

யானையை வீழ்த்திப் புலி குழுமும் ஓசை, 
சிற்றூரில் வில்லால் வாழும் மக்கள் மது அருந்திவிட்டு, துடி முழக்கும் ஓசை 

ஆகியவற்றைக் கேட்டுக்கொண்டே தங்கினோம்.
என்றான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் 5
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, ''நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
ஏகு'' என, ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,            10
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.   15

புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

துடி முழக்கம் (உடுக்கு அடித்தல்) 
துடி முழக்குதல் |
உடுக்கு அடித்தல் (இக்காலம்) 

No comments:

Post a Comment