Pages

Thursday, 15 September 2016

அகநானூறு Agananuru 259

தலைவனுடன் செல்லுமாறு தலைவியை ஆற்றுப்படுத்தும் தோழி சொல்கிறாள்.

1
தலைவனுடன் வந்தவர்களின் வேல்கள் மின்னுகின்றன. 
அவனது பாதுகாவலர்கள் நடமாடுகின்றனர். 
உனக்கென மாலையும் தொடுத்து வைத்துள்ளனர். 
தழையாடையும் தைத்து வைத்துள்ளனர். 
நீர் அற்ற நிலம் வெம்மை நீங்கும்படி மழையும் பெய்துள்ளது. 
உலர்ந்த மரங்கள் தளிர்த்துள்ளன. 
தோன்றி பூத்திருக்கிறது. 
சோலை தழைத்திருக்கிறது. 
காட்டுப் பாதையும் மிக நன்றாக இருக்கிறது. 
பனிக்காலம் போய், வேனில் காலம் பிறந்திருக்கிறது. 
மாலை-நிலாவும் பால் போல் ஒளி வீசுகிறது. 
அவரிடமிருந்து  தூது வந்துள்ளது.
2
நீ மனம் கலங்க வேண்டாம். 
என் சொல்லை நம்பிப் புறப்படு.
என் நெஞ்சு நிறைந்தவளே!
புறப்படு.
3
நீ விளையாடிய தெற்றிக்காய் பயன்படாமல் காய்ந்து கிடந்தாலும், 
நீ வளர்த்த வயலைக் கொடி வாடினாலும், 
நீயும் உன் காதலனும் கூடி மகிழ்ந்த நொச்சிச் செடியில் பூ சாய்ந்தாலும், 

உன்னைக் காட்டிலும் மடமை மிக்க உன் அன்னை உன் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக்கொள்வாள். 

உன் அண்ணனும், தந்தையும் புலி போன்ற தன் செம்மாப்பை எண்ணிப் பொறுத்துக்கொள்வார்கள்.

நான் மீண்டும் ஒருமுறை உன் முலையைத் தழுவுகிறேன்.
அவருடன் புறப்படு.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக்
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் 5
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன்
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்,
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போது வந்தன்று, தூதே; நீயும் 10
2
கலங்கா மனத்தை ஆகி, என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி!
3
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்,
நின்னினும் மடவள் நனி நின் நயந்த 15
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே!

உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.
கயமனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

தோழியும் தலைவியும்
தழுவுவதாக வைத்துக்கொள்வோம் 

No comments:

Post a Comment