Pages

Tuesday, 13 September 2016

அகநானூறு Agananuru 255

அவர் பொருளீட்டக் 
கடலில் கப்பலில் 
சென்றுள்ளார்.

1
உலகம் ஒளியில் திகழ்வது போலத் தோன்றும் வங்கக் கப்பல் அது. 
அது புலால் நாற்றம் வீசும் கடலைப் பிளந்துகொண்டு செல்லும். 
இரவும் பகலும் ஓயாமல் விரைந்து செல்லும். மீளும். 
அதில் கொண்டுவரும் பண்டங்களை (வங்கூழ் = வங்கத்தில் வந்த செல்வம்) உயர்ந்த மணல்மேட்டில் இறக்கவேண்டும். 
நீகான் என்பவன் மாலுமி. 
கரையில் மாடத்தில் எரியும் விளக்கைப் (கலங்கரை விளக்கம்) பார்த்துக்கொண்டு  நீகான் வங்கத்தை ஓட்டிவருவான். 

இப்படி நிகழும் பொருள் தேடல் முயற்சியில் உன் காதலர் பலநாள் கழித்துகொண்டிருக்கிறார். 

அவர் இல்லாமல் உனக்குப் பொழுது போகவில்லை.

தோழி! உன் துன்பம் தீர அவர் வந்துவிடுவார்.
2
“கடலலை மோதும் வயல் நிலத்தில் நம் ஊர் இருக்கிறது. 
நம் மாடத்தில் வாடைக்காற்று வீசுகிறது. 
வழியில் பூத்துக்கிடக்கும் கருவிளை, அதன் நிறத்துக்கு எதிரான நிறத்தில் புதரில் பூத்திருக்கும் பகன்றை ஆகியவை மலரும்படி வீசுகிறது. 
அல்லி, பாகல், கூதளம், பூக்கும்படி வீசுகிறது. 
இவற்றின் மணம் நம் மாடியில் மணக்கும்படி வீசுகிறது. 
இரவெல்லாம் வீசுகிறது. 

அப்போது அவரை நான் நினைக்கிறேன். 
மெலிவால் என் அணிகலன்களும் தோள் வளையலும் கழலுகின்றன”.
என்றெல்லாம் சொல்லி வருந்த வேண்டாம். 

உன் அன்புக்கு உரியவர் வந்துவிடுவார். 
வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
இப்படிச் சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்   5
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர் மன்னால் தோழி! தண் பணைப்
2
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,      10
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை   15
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
''திருந்து இழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்'' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

வங்கம்

No comments:

Post a Comment