Pages

Monday, 12 September 2016

அகநானூறு Agananuru 252

புலியையும், யானையையும் கொல்லும் விலங்கு ஆளி (யாளி).  

1
ஆளி என்பது ஒரு விலங்கு. 
அது தாக்கும் விலங்கைத் தன் இடப்பக்கமாக எறியாமல், 
வலப்பக்கமாக விழும்படி எறியும். 
அது வரிப்புலியைத் தாக்க வந்துகொண்டிருந்தது. 
அந்த வரிப்புலி நடுங்கும்படி யானை தாக்கிக் கொன்றது. 
அதனைக் கண்ட ஆளி சினம் கொண்டு யானையின் முகத்தில் பாய்ந்து அமர்ந்துகொண்டு, அதன் தந்தங்களைப் பிடுங்கியது. 

இப்படித் தாக்கும் மலைச்சோலை வழியில் ஒரே ஒரு வேலை மட்டும் வைத்துக்கொண்டு தனியே வருவதற்கு அவன் அஞ்சுவதில்லை.
2
கண்ணீர் விட்டுக்கொண்டு துன்ப நோயுடன் இருப்பதற்கு என்னாலும் முடியவில்லை.

தோழி! என்ன செய்யலாம்?
3
வெள்ளை நிற ஈங்கைப் பூக்கள் உதிரும்படி வீசி, நள்ளிரவில் பொழியும் பருவ மழைத் திவலைகள் தாக்குகையில், 

சிறிய கரையை உடைய பெரிய குளத்தைக் காப்பவன் உறங்காமல் இருப்பது போல 

என் தாய் என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாள்.

என்ன  செய்யலாம்?

தலைவி தோழியை வினவுகிறாள். தலைவன் காத்திருக்கிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,         5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
2
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
3
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்   10
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங் குளம் காவலன் போல,
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது.
நக்கண்ணையார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

சிம்மம் | ஆளி அன்று

 ஆளி | யாளி (சிதம்பரம் கோயில்)

ஆளி | யாளி | புராண விலங்கு என்பர்

ஆளி |தஞ்சாவூர்

No comments:

Post a Comment