Pages

Friday, 9 September 2016

அகநானூறு Agananuru 245

நெஞ்சே! ஒட்டகத்துக்கு எலும்பு மட்டுமே உணவாகக் கிடைக்கும் வழியில் இவளை இங்கே விட்டுவிட்டு நான் உன்னுடன் பொருளீட்ட வரமாட்டேன், என்கிறான் தலைவன்.

1
நெஞ்சே! உயிரைக் காட்டிலும் சிறந்தது புகழைத் தரும் பொருள்; அந்தப் பொருளைக் கொண்டுவரும் நற்செயலில் ஈடுபட்டு அவர் சென்றுள்ளார் என்று வீட்டையே வலிமையாகப் பற்றிக்கொண்டு வாழும் வல்லமை அவளுக்கு உண்டு என்பதை நீ நன்றாகத் தெரிந்துகொண்டு என்னைப் பொருள் தேட அழைக்கிறாய்.
2
அவளை இங்கே விட்டுவிட்டு நான் வரமாட்டேன். 

மழை பெய்யாததால் மூங்கில் மரம் காயும் காடு. அந்தக் காட்டு வழியாகச் செல்லும் வணிகக் கூட்டத்தை அங்கு வில்லம்புடன் வாழும் இளைஞர்கள், பண்பில்லாத தன் தலைவனுடன், பொழுது விடிந்ததும், கோடு போட்டிருக்கும் பருத்த தோளும், மடிப்பு (திதலை) விழுந்த வயிறும் கொண்ட கள்விற்பவள் வீட்டு முற்றத்தில், விலையாகத் தர ஏதும் இல்லாமையால், கள்ளைப் பெறமுடியாமல், தன் புதல்வன் தலையை நீவிக்கொடுத்துக், காட்டுயானையின் தந்தங்களைக் காட்டிக், கொண்டுவந்து கொடுக்கலாம் என்று காட்டிக்கொண்டிருப்பர்.

அப்படிப்பட்ட போர்முனைகள் இருக்கும் ஊரில் தங்கிச் செல்ல வேண்டும்.
3
அங்கே தீ எரிவது போல் இலவமரம் பூத்திருக்கும். அந்த இலவ மர நிழலில் தங்க முடியாது. பூவில் தேன் உண்ணும் தும்பி குழல் போல் ஓசை எழுப்பும்.
4
சிறிய மலைப்பாதையில் காயும் எலும்புகள், வலிமையான கால்களை உடைய (கருங்கால்) ஒட்டகத்தின் பசியைப் போக்கும். 
அந்தக் கல்மலை வழியில் செல்ல நினைக்கிறாய்.

அழகிய மாமை நிறம் கொண்ட இந்த அரிவைப் பெண்ணை விட்டுவிட்டு நான் வரமாட்டேன்.

தலைவன் தன் நெஞ்சோடு இவ்வாறு பேசுகிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்'' என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
2
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,             5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
மகிழ் நொடை பெறாஅர் ஆகி, நனை கவுள் 10
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
3
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்    15
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
4
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம் மா அரிவை ஒழிய,   20
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

வெள்ளெலும்பு தின்னும் ஒட்டகம்

No comments:

Post a Comment