Pages

Saturday, 6 August 2016

பரிபாடல் Paripadal 21

திருப்பரங் குன்றத்துச் செல்வனை வேண்டுகின்றனர். அவன் குன்றத்துக்கு வருபவர்களின் காதல் களியாட்டங்களும் இப்பாடலில் இழையோடுகின்றன.
திருப்பரங்குன்றம்
வல்லோன் எழுதெழில் ஓவம் (ஓவியம்) 
1
திருப்பரங்குன்றத்துச் செல்வ!
நீ ஊர்ந்தது வேழம் | உன் ஊர்தி யானையின் தலையில் எரியும் தீ போல் இமைக்கும் நெற்றி-ஓடை இருக்கிறது. அது போரில் வெற்றி கண்ட யானை.
நீ காலில் அணிந்துகொண்டிருப்பது தாமரை | இந்தத் தாமரை மென்மையானது. நீர்த்துறையில் இருப்பது. அந்தத் துறையில் மறை நூல்கள் அழுந்திக் கிடக்கின்றன.
நீ உடுத்தியிருப்பது மயில்பீலி ஆடை | முதுகுத் தோலோடு மயிருடன் உரித்தெடுத்த மயிலாடை. பாம்புத் தோல் போன்ற ஆடை.
உன் கையில் உள்ளது வேல். பகையாக விளங்கிய சூரபன்மனைக் கொன்ற வேல். | கிரவுஞ்சம் என்னும் பறவைமலையைக் கிழித்து அந்தப் பறவையின் பெயரைப் பூண்டிருக்கும் வேல்.
நீ பூணாக அணிந்திருப்பது கடப்பம்பூ மாலை | உருண்டு திரண்டிருக்கும் கடப்பம் பூவொடு இலைகளையும் சேர்த்துக் கட்டிய மாலை.
நீ அமர்ந்திருப்பது உயர்ந்தோர் போற்றும் நாக்கு.
உன் இடை-அணி ஏழாக அடுக்கிக் கிடக்கும் மேகலை.
மலை, சுனை, தரை, விசும்பு அனைத்துமாக விளங்குவது உன் தண்பரங்குன்றம்.
குன்றத்துச் செல்வ, எங்களை உன் காலடியில் கிடப்பவரகளாக ஆக்கிக்கொள் என்று தொழுகின்றோம். அருள்வாயாக.
2
குன்றத்தில் உன்னிடம் வருபவர்கள் இடையில் பொன்னால் செய்த ஞெகிழமும் (ஒட்டியானம்), மார்பில் முத்துமாலையும் அணிந்துகொண்டு துடி (உடுக்கு) ஓசைக்கு ஏற்ப அடி பெயர்த்து, தோளை அசைத்து ஆடுகின்றனர். காய்ச்சிய நறாக்கள் மகிழ்ச்சி தருவதுபோல் இன்பமூட்டி ஆடுகின்றனர். வேல் போன்ற கண்களைக் காட்டிச் சிலர் கணவன்மாரோடு பிணக்கிக்கொள்கின்றனர். சிலர் கண்ணாடி (நிழல்கால் மண்டிலம்) பார்த்து அணிகலன்களைத் திருத்திக்கொள்கின்றனர். சிலர் முலையில் சந்தனம் பூசிக்கொள்கின்றனர். அதனைக் கணவன் மார்புக்கு விருப்பத்தோடு ஊட்டுகின்றனர். இப்படி ஆங்காங்கே வல்லோன் வரைந்த ஓவிங்கள் போல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
3
விசிறி விசிறுவது போல் மேகம் அசைந்தாட மயில் ஆடுகிறது. தூம்புக் குழலில் உள்ள துளையில் விரல் விளையாடும்போது எழும் இசைக்கு ஏற்ப, தும்பி மலரில் அமர்ந்து ஊதுகிறது. வண்டினம் யாழ் போல் இசை எழுப்புகிறது. முரசு முழங்குவது போல அருவி ததும்புகிறது. இவை குன்றத்தில் எழும் ஒலிகள்.
4
ஒருத்தி சுனையில் குளிக்கும்பபோது மித்துவந்தாள். அவளை அவளது கணவன் கையால் பிடித்து இழுத்தான். அவள் “கையை விடு” என்று விடுவித்துக்கொண்டு தன் நீர்க்குண்டை (பூநீர் பெய் வட்டம்) அவன் மேல் எறிந்தாள். பின் நீரில் தவித்தாள். அவளது திலை கண்ட கணவன் மகிழ்த்து விழுந்து அவளை அணைத்துத் தூக்கினான்.
5
மைந்தர் பூசிய சந்தனக் காற்றும், மகளிர் கூந்தல் உலர்த்திய காற்றும், முருகவேளுக்கு எடுத்த புகையும் எங்கும் மணம் பரப்பின.
6
தழைத் தோரணங்களோடு கோதை மாலைகள் தொங்கின. மகளிர் அசைந்தாடி ஒய்யாரமாக வந்தனர். அவர்களின் மேனியில் தேன் மணம் கமழ்ந்தது. ஒருத்தி சிவந்த கண்ணால் கணவனை உருட்டிப் பார்த்தாள். அவளது முத்தாரமும் ஆடையும் நழுவின. அது வாடைக் காற்றில் கொடி ஆடுவது போல் இருந்தது. அவளது கண் உருள்வது, அம்பை உருட்டித் தீட்டுவது போல் இருந்தது.
7
பகைவரைத் தேய்த்த செல்வ! மாற்றாரை அழித்த உன் வேல், பன்னிரு தோள், ஆறு முகம், ஆகியவற்றைத் தொழுகின்றோம். எங்களுடைய சுற்றத்தாருடன் என்றென்றும் உன் திருவடியில் நிலைபெற்றிருக்க வேடும் என்று வேண்டித் தொழுகின்றோம்.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
21. செவ்வேள்
1
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த, 5
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.
கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மா முதல் தடிந்து,
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;
பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த    10
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்.
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அணி நீர்ச் சூழி,
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்.           15
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்
வென்றிக் கொடி அணி செல்வ! நிற் தொழுது.
2
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,
துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்,        20
நுனை இலங்கு எஃகெனச் சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனைத் துனிப்பவள் நிலையும்;
நிழல் காண் மண்டிலம் நோக்கி,
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;
பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்  25
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;
பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்
ஓவத்து எழுது எழில் போலும் மா தடிந்
திட்டோய்! நின் குன்றின்மிசை.
3
மிசை படு சாந்தாற்றி போல, எழிலி  30
இசை படு பக்கம், இரு பாலும் கோலி,
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க;              35
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று.
4
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்
மீ நீர் நிவந்த விறலிழை, 'கேள்வனை     40
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக' என,
பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,
கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,
தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று.    45
5
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,
உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த    50
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,
அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த
பசும் பூண் சேஎய்! நின் குன்றம் நன்கு உடைத்து.
6
கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்
ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த    55
செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,
மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்
பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,
பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்
சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான்,          60
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர்
ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்.
வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்.  65
7
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;
ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை
இன்று போல் இயைக!' எனப் பரவுதும்
ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே.  70

கடவுள் வாழ்த்து
நல்லச்சுதனார் பாட்டு
கண்ணகனார் இசை
பண் காந்தாரம்

காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment