Pages

Monday, 29 August 2016

அகநானூறு Agananuru 216

பரத்தையின் பெருமிதப் பேச்சு

1
பாண்மகள் தூண்டில் போட்டு வரால் மீனைப் பிடிப்பாள். 
அவள் தந்தை பனை நாரில் அரித்த கள்ளைப் பருகிக்கொண்டு படுத்திருப்பான். 
பாண்மகள் தான் பிடித்துவந்த வரால் மீனை வஞ்சிமர விறகில் சுட்டுத் தந்தைக்குத் தின்னக் கொடுப்பாள். 
இப்படிக் கொடுக்கும் ஊரை உடையவன் அந்த ஊரன். 
ஊரன் மனைவி சொல்கிறாளாம்.
2
அவள் விரும்பியபடி ஏதேதோ சொல்கிறாளாம். 
அவள் என்னை அலர் தூற்றும் நிலைக்கு ஆளாகிவிட்டேன். 
இனி என்ன ஆகிவிடப் போகிறது?
3
கடலில் விளையாடும் மகளிர் ஞாழல் பூக்களைப் பறிப்பர். 
கழனியில் பாடுபடும் உழவர் குவளைப் பூக்களைக் களையாகக் களைந்து எறிவர். 
முல்லைநில மக்கள் முல்லைப் பூக்களைப் பறிப்பர். 

இந்த மூவகைப் பூக்களையும் சேர்த்துக் கோசர் குடிமக்கள் மாலையாகத் தொடுத்து அணிந்துகொள்வர். 

அப்படிக் கோசர் வாழும் ஊர் செல்லூர்
அவர்களின் அரசன் செல்லிக்கோமான்

செல்லிக் கோமானை ஆதன் எழினி தாக்கினான். 
ஆதன் எழினி ஆண்யானை போல் வலிமை மிக்கவன். 
செல்லிக்கோமான் எறிந்த வேல் ஆதன் எழினியின் மார்பில் பாய்ந்தது. 
ஆதன் எழினி வருந்தினான்.

பரத்தை சொல்கிறாள்.
நான் ஊரன் மனைவி வாழும் தெருவுக்குச் சென்றால், 
ஊரன் மனைவி 
ஆதன் எழினி போல் புண்பட்டு வருந்தவேண்டிய நிலை இருக்கும்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
''நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5
2
பெட்டாங்கு மொழிப'' என்ப; அவ் அலர்ப்
பட்டனம் ஆயின், இனி எவன் ஆகியர்;
3
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,                10
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
பெருங் களிற்று எவ்வம் போல,               15
வருந்துப மாது, அவர் சேரி யாம் செலினே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது.
ஐயூர் முடவனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பரத்தை

வரால் மீன்

No comments:

Post a Comment